சென்னை: தமிழகத்தில் தடையை மீறி அதிகாரிகளுக்கு லஞ்சம் அளித்து குட்கா பொருள்கள் விற்கப்பட்டதான புகாரில் டெல்லி சிபிஐ காவல்துறை வழக்கை விசாரித்து வருகிறது. இதில் மாதவராவ், சீனிவாசராவ், உமாசங்கர் குப்தா, உணவு பாதுகாப்புத்துறை அதிகாரி செந்தில்முருகன், மத்திய கலால்துறை அதிகாரி நவநீத கிருஷ்ண பாண்டியன், சுகாதாரத்துறை அதிகாரி சிவக்குமார் ஆகிய 6 பேர் மீது வழக்கு பதிவு செய்த சிபிஐ, இவர்களுக்கு எதிராக சென்னை சிபிஐ நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்தது.
இந்நிலையில், முன்னாள் அமைச்சர்கள் சி.விஜயபாஸ்கர், பி.வி.ரமணா, சென்னை முன்னாள் போலீஸ் கமிஷனர் உள்ளிட்ட மத்திய, மாநில அரசு உயர் அதிகாரிகளுக்கு எதிராக கூடுதல் குற்றப்பத்திரிகையை சிபிஐ கடந்த மே மாதம் தாக்கல் செய்தது. இந்த வழக்கு சிபிஐ நீதிமன்ற நீதிபதி எழில்வளவன் முன்பு மீண்டும் விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி, இந்த வழக்கில் முன்னாள் மற்றும் இந்நாள் சட்டமன்ற உறுப்பினர்கள் உள்ளதால் வழக்கு விசாரணை சென்னையில் உள்ள நாடாளுமன்ற மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள் மீதான குற்ற வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்திற்கு மாற்றம் செய்து உத்தரவிட்டு விசாரணையை ஆகஸ்ட் 2 தேதிக்கு தள்ளி வைத்தார்.