நாமக்கல்லில் பாஜ மாநில துணைத்தலைவர் கே.பி.ராமலிங்கம் நிருபர்களிடம் கூறியதாவது: பாஜ வீக்கா இருந்தது உண்மை தான். யார் இல்லை என்கிறார்கள். தேர்தலில் மக்களின் ஆதரவை கேட்கிறோம். பிரதமர் மோடி, மறைந்த முதல்வர்கள் எம்ஜிஆர், ஜெயலலிதா ஆகியோரை, எப்போதும் குறைசொல்லி பேசியதில்லை. எம்ஜிஆர் அரசியலை மோடி ஏற்கனவே பார்த்துள்ளார். ஜெயலலிதா முதல்வராக இருந்த போது, மோடி குஜராத் முதல்வராக இருந்துள்ளார். ஜெயலலிதாவின் ஆட்சியை அவர் கவனித்துள்ளார். இதனால் இருவரையும் அவர் பாராட்டி பேசுகிறார்.
எனவே எம்ஜிஆர் தொண்டர்களும், ஜெயலலிதா தொண்டர்களும் பாஜவுக்கு வரட்டும். பாரதிய ஜனதா கட்சியை ஆதரிக்கட்டும். எம்ஜிஆர் அதிமுகவை துவங்கும் முன்பு, எம்ஜிஆர் மன்றங்கள் ஏற்றிய கொடி தாமரை கொடியாகும். அப்போது பாரதிய ஜனதா கட்சி இல்லை. ஜனசங்கமாக இருந்தது. அதன் சின்னம் திருவிளக்காகும். 1980ல்தான் பாஜ தோன்றியது. அப்போது தான் தாமரை சின்னம். ஆனால் 1972ம் ஆண்டே, எம்ஜிஆர் மன்றத்தின் கொடி தாமரை கொடியாகும். எனவே, தமிழ்நாட்டை பொறுத்தவரை தாமரை சின்னம், எம்ஜிஆர் கொடுத்த சின்னம் என்று கூட சொல்லலாம். எம்ஜிஆர் தொண்டர்கள் எல்லாரும் தாமரைக்கு வாக்களிக்க வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.
* ஆள் மேல் ஆள் அனுப்பி அதிமுக கூட்டணிக்காக தவம் கிடக்கும் பாஜ: போட்டு உடைத்த கடம்பூர் ராஜூ
கோவில்பட்டியில் அதிமுக முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜூ எம்எல்ஏ நேற்று நிருபர்களிடம் கூறியதாவது: தூத்துக்குடி நாடாளுமன்ற தொகுதி கடந்த முறை கூட்டணி கட்சிக்கு ஒதுக்கப்பட்டது. ஆனால் இந்த தடவை அதிமுகவே நேரடியாக களம் காண்கிறது. தமிழகத்தில் பாஜவுக்கு ஒரு சீட் கூட கிடைக்காது. அதிமுக பலம் வாய்ந்த கட்சியாக இருப்பதால் கூட்டணி குறித்து கட்சிகள் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றன. விரைவில் அதிமுக தலைமையில் மெகா கூட்டணி அமையும். இந்த நிமிடம் வரை அதிமுகவுடன் கூட்டணி வைக்க பாஜ தவம் கிடக்கிறது. கூட்டணி வைத்துக் கொள்வதற்காக ஆள் மேல் ஆள் அனுப்பி வருகின்றனர்.
அதிமுக பலமாக இருப்பதால்தான் பாஜ நம்மை தேடுகிறது. பாஜ தற்போது நம்மை அட்டாக் பண்ணவில்லை. பிரதமர் இந்த மாதிரி இறங்கி பேசினது கிடையாது. தேசிய கட்சிகளுக்கு தமிழகத்தில் அதிகபட்சம் 5 சதவீத வாக்குகள் தான் கிடைக்கும். திராவிட கட்சிகள் இல்லாமல் தேசிய கட்சிகள் தமிழகத்தில் காலூன்ற முடியாது. தேசிய கட்சிகளுக்கு வாக்களிக்கக் கூடாது என்ற நிலை தமிழகத்தில் உள்ளது. பாஜ வளர்ந்து விட்டதாக கூறுகிறார்கள். அதை வரும் தேர்தலில் பார்ப்போம். அத்தனை கட்சிகளும் கூட்டணிக்காக இன்னும் ஒரு வார காலத்திற்குள் அதிமுகவை தேடி வரும் நிலை இருக்கும். இவ்வாறு அவர் பேசினார்.