சென்னை: தி.நகர் சத்யா மீதான வழக்குகளில் 4 மாதத்தில் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்படும் என லஞ்ச ஒழிப்பு துறை, சென்னை உயர் நீதிமன்றத்தில் உறுதி அளித்துள்ளது. சென்னை கொளத்தூரை சேர்ந்த வழக்கறிஞர் ஆர்.பாலசுப்பிரமணியன், சென்னை உயர்நீதிமன்றத்தில், பொதுநல வழக்கு தாக்கல் செய்தார். அதில், சென்னை தி.நகர் தொகுதி அதிமுக முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும் தென்சென்னை வடமேற்கு மாவட்ட செயலாளருமான சத்யா மீது தமிழ்நாடு லஞ்ச ஒழிப்பு துறை போலீசார் 2 வழக்குகளை பதிவு செய்துள்ளது.
வருமானத்துக்கு அதிகமாக ரூ.2.64 கோடி சொத்து சேர்த்ததாக ஒரு வழக்கும், தொகுதி மேம்பாட்டு நிதி ரூ.35 லட்சத்தை முறைகேடாக பயன்படுத்தியது தொடர்பாக மற்றொரு வழக்கும் சத்யா உள்ளிட்டோர் மீது பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த வழக்குகளின் விசாரணையில் எந்த முன்னேற்றமும் இல்லை. எனவே, இவர் மீதான வழக்கை விரைந்து விசாரித்து முடித்து குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யுமாறு உத்தரவிட வேண்டும்’ என்று கோரியிருந்தார்.
இந்த வழக்கு பொறுப்பு தலைமை நீதிபதி டி.கிருஷ்ணகுமார், நீதிபதி பி.பி.பாலாஜி அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. லஞ்ச ஒழிப்புத்துறை சார்பில் ஆஜரான அரசு கூடுதல் குற்றவியல் வழக்கறிஞர் ஆர்.முனியப்பராஜ், இந்த வழக்கின் மீதான புலன் விசாரணை நடந்து வருகிறது. 4 மாதத்திற்குள் இந்த வழக்குகளில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படும்’ என்றார். இதை பதிவு செய்து கொண்ட நீதிபதிகள், வழக்கை முடித்து வைத்தனர். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.