அதிமுக ஆட்சியிலும் கல்வராயன் மலையில் கள்ளச்சாராயம் காய்ச்சி விற்கப்பட்டது: திண்டுக்கல் சீனிவாசன் பேச்சால் பரபரப்பு

திண்டுக்கல்: அதிமுக ஆட்சி காலத்திலும் கல்வராயன் மலையில் கள்ளச்சாராயம் காய்ச்சி விற்கப்பட்டது என, முன்னாள் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் பேசியதால் பரபரப்பு ஏற்பட்டது. திண்டுக்கல்லில் அதிமுக கிழக்கு, மேற்கு மாவட்டங்கள் சார்பில், கள்ளக்குறிச்சி சம்பவத்தை கண்டித்து நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. முன்னாள் அமைச்சர்கள் திண்டுக்கல் சீனிவாசன், நத்தம் விசுவநாதன் ஆகியோர் தலைமை வகித்தனர். இதில் கலந்து கொண்ட முன்னாள் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் பேசியதாவது: திண்டுக்கல் சிறுமலையைப் போலவே, கள்ளக்குறிச்சியில் கல்வராயன் மலை அமைந்துள்ளது.

கடந்த அதிமுக ஆட்சிக்காலத்தில் நான் வனத்துறை அமைச்சராக இருந்தபோது, நான் அந்த மலைக்கு போனேன். அங்கு எங்கு பார்த்தாலும் அடுப்பு எரிந்தது. உடன் வந்தவர்களிடம் என்னவென்று கேட்டேன். அவர்கள் சாராயம் காய்ச்சி விற்பதாக சொன்னார்கள்’ என்றார். இவ்வாறு திண்டுக்கல் சீனிவாசன் பேசியதைப் பார்த்து, பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்தனர். அதிமுக காலத்திலேயே கள்ளச்சாராயம் காய்ச்சும் தொழில் நடந்துள்ளது. அப்போதே அதை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்காமல் தற்போது மக்களை ஏமாற்ற ஆர்ப்பாட்டம் நடத்துகிறீர்களா என அதிருப்தி தெரிவித்தனர்.

Related posts

ஓரிக்கை சமத்துவபுரம் குடியிருப்பில் மழைநீர் வடிகால்வாய் அமைக்க வேண்டும்: பொதுமக்கள் கோரிக்கை

உத்திரமேரூரில் திரவுபதியம்மன் கோயிலில் துரியோதனன் படுகளம்

மீண்டும் முதல் மனைவியுடன் வாழ ஆசைப்பட்டு 2வது மனைவியை பெட்ரோல் ஊற்றி எரிக்க முயன்ற கணவரிடம் போலீசார் விசாரணை: காஞ்சிபுரத்தில் பரபரப்பு