10 ஆண்டு கால அதிமுக ஆட்சியில் கேபிள் டிவி தொழிலாளர்கள் நலவாரியம் முடக்கி வைக்கப்பட்டிருந்தது: அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தகவல்

பேரவையில் கேள்வி நேரத்தின்போது செய்யூர் மு.பாபு (விசிக) கேட்ட கேள்விக்கு தகவல் தொழில்நுட்பம் மற்றும் டிஜிட்டல் சேவைகள் துறை அமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன் அளித்த பதில் வருமாறு: கலைஞர் ஆட்சி காலத்தில் 2017ம் ஆண்டில் கேபிள் டிவி நல வாரியத்திற்கு தலைவர் மற்றும் உறுப்பினர்களை நியமித்தார். ஆனால், அதிமுக ஆட்சியில் கேபிள் ஆபரேட்டர்கள் பலமுறை கோரிக்கை வைத்தும் நல வாரியம் முடக்கி வைக்கப்பட்டிருந்தது. ஒரு காலத்தில் அரசு கேபிள் டிவி நிறுவனத்தில் 70 லட்சம் இணைப்புகள் இருந்தன. நிர்வாக குளறுபடியால் இது 36 லட்சம் இணைப்புகளாக குறைந்து விட்டது. அரசு கேபிள் டிவி நிறுவனம் திவாலான நிலையில்தான் எங்களிடம் தந்தார்கள்.

இப்போது நிர்வாக குளறுபடிகள் சரி செய்யப்பட்டு 2 மாதங்களுக்குள் ஹெச்டி பாக்ஸ், புது கண்ட்ரோல் ஆக்சிஸ் சிஸ்டம் உள்ளிட்ட தொழில்நுட்பங்களை பயன்படுத்தி பழைய உச்சத்தை அடையும் செயல்திட்டத்தை செயல்படுத்தி வருகிறோம். திமுக ஆட்சி அமைந்த பிறகு தமிழ்நாடு கேபிள் டிவி ஆப்ரேட்டர்கள் மற்றும் தொழிலாளர்கள் நல வாரியம் மறு சீரமைப்பு செய்யப்பட்டு தலைவர் மற்றும் உறுப்பினர்கள் நியமிக்கப்பட்டனர். இதன்மூலம் கேபிள் டிவி ஆபரேட்டர்கள் மற்றும் அவர்களின் குடும்பத்தினர் பல்வேறு அரசு நலத்திட்டங்களை பெறுவதற்கு வழிவகை செய்யப்பட்டுள்ளது. புதிய உறுப்பினர்களை சேர்க்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இவ்வாறு அமைச்சர் தெரிவித்தார்.

Related posts

நீட் தேர்வு வழக்கு: ஜூலை 8-ல் விசாரணை

தமிழக அரசின் ஐஏஎஸ் அதிகாரி மத்திய பணிக்கு மாற்றம்..!!

இந்துக்களிடம் பிரிவினையை தூண்டலாம் என பிரதமர் நரேந்திர மோடி நினைக்கிறார்: செல்வப்பெருந்தகை குற்றசாட்டு