அதிமுக செய்த தவறுகளுக்காக தண்டனை தமிழ்நாட்டில் தாமரை மலராது என மக்கள் தெளிவுபடுத்தியுள்ளனர்: கனிமொழி எம்பி பேட்டி

சென்னை: தூத்துக்குடி நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிட்டு மீண்டும் வெற்றி பெற்ற நாடாளுமன்ற உறுப்பினரும், திமுக துணை பொது செயலாளருமான கனிமொழி, நேற்று காலை தூத்துக்குடியில் இருந்து விமானத்தில் சென்னை வந்தார். அவருக்கு திமுக நிர்வாகிகள் மற்றும் திமுக மகளிர் அணி சார்பில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. அப்போது கனிமொழி செய்தியாளர்களிடம் பேசியதாவது: தமிழ்நாட்டில் பாஜவிற்கு இடமே இல்லை, தமிழ்நாட்டில் தாமரை மலராது என்று மிகத் தெளிவாக மக்கள் தெளிவுபடுத்தியுள்ளனர். அவர்களில் நிறைய பேர் கனவோடு இருந்தனர். அந்த கனவு தற்போது தெளிவாக்கப்பட்டுள்ளது.

அண்ணாமலை என்னை பார்த்து அடிக்கடி ஒரு கேள்வி கேட்பார். கனிமொழிக்கு என்ன தகுதி இருக்கிறது என்று, இரண்டாவது முறையாக மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு மக்கள் பிரதிநிதியாக நான் அவருக்கு பதில் சொல்கிறேன், நீங்கள் அந்த தகுதியை கூட பெறவில்லை. எனவே இந்த தகுதி இல்லாத ஒருவர், தமிழ்நாட்டின் பாஜவின் தலைவராக நீடிப்பது அந்த கட்சிக்கு நிச்சயமாக நல்லது கிடையாது. அதிமுக கடந்த காலத்தில் செய்த தவறுக்காக மக்கள் அவர்களுக்கு தண்டனை கொடுத்துள்ளனர். வாக்கு எண்ணிக்கையில் முதல் சில சுற்றுகளில் பின்தங்கி தோல்வி முகத்தில் இருந்த மோடி, தோல்விக்கு தார்மீக பொறுப்பேற்று உடனடியாக பதவி விலக வேண்டும். இவ்வாறு கனிமொழி கூறினார்.

Related posts

கந்துவட்டி பிரச்சனை வழக்கை சிபிசிஐடி விசாரிக்க உயர் நீதிமன்றக்கிளை உத்தரவு

ஆலத்தூர் ஒன்றியத்தில் தனி நபர்களின் ஆக்கிரமிப்பில் இருந்து மீட்கப்பட்ட 13 ஏக்கர் நிலம்: மரக்கன்றுகளை நட்டுவைத்து கலெக்டர் அசத்தல்

சென்னை புறநகர் பகுதிகளில் காற்றுடன் கனமழை