ஈரோடு: முதல்வர் மு.க.ஸ்டாலின் குறித்த அவதூறு வீடியோவை பரப்பியதாக ஈரோட்டை சேர்ந்த அதிமுக ஐ.டி. பிரிவு நிர்வாகியை போலீசார் கைது செய்தனர். ஈரோடு மாவட்டம், சிவகிரி அருகே உள்ள தட்டாம்பாளையத்தைச் சேர்ந்தவர் கவுதம் (24). இவர், ஈரோடு மாநகர் மாவட்ட அதிமுக ஐ.டி. விங்கில் செயல்பட்டு வருகிறார். இந்த நிலையில் நேற்று முன்தினம் அவரது செல்போனுக்கு வந்த ஒரு வீடியோ, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் குறித்து அவதூறான தகவலை பரப்பும் வகையில் இருந்தது.
அதில் சிறிது மாற்றம் செய்த, கவுதம் தனது பெயரையும் சேர்த்து மற்றவர்களுக்கு அனுப்பினார். இதையறிந்த ஈரோடு சைபர் கிரைம் போலீசார், நேற்று கவுதம் மீது 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்து எஸ்பி அலுவலகம் அழைத்து வந்தனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.