இந்த சூழ்நிலையில், அண்ணாமலை, அதிமுக மாஜி அமைச்சர்களின் ஊழல் பட்டியலையும் வெளியிடுவேன் என்று கூறியது கூட்டணி கட்சியினரான அதிமுகவினர் மத்தியில் மீண்டும் புயலை கிளப்பியது. அதை தொடர்ந்து, பாஜ கூட்டம் ஒன்றில் பேசிய அண்ணாமலை, ‘கூட்டணிக்காக மற்றவர்களிடம் நாம் கைகட்டி நிற்க வேண்டியது இல்லை, திராவிட கட்சிகளுடன் இணைந்து எந்த தேர்தலையும் சந்திக்க பாஜ விரும்பவில்லை. தேர்தலின் போது யாருக்கும் சால்வை போட்டும் குனிந்து செல்ல விரும்பவில்லை. அனைவரின் ஊழல் பட்டியலையும் வெளியிடுவேன்’ என்று மறைமுகமாக அதிமுகவை குத்தி காட்டி பேசினார்.
இதனால், கடந்த அதிமுக ஆட்சியில் அமைச்சர்களின் ஊழல் பட்டியலை வெளியிடுவாரோ என்ற பரபரப்பு தமிழ்நாடு அரசியல் களத்தில் எழுந்தது. இந்நிலையில், பாஜ மாநில தலைவர் அண்ணாமலை 110 நாட்கள் பாதயாத்திரை நடத்தவுள்ளார். இந்த நிகழ்ச்சி, நாளை ராமேஸ்வரத்தில் தொடங்குகிறது. இந்த விழாவில் ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா கலந்து கொள்கிறார். நிறைவு விழாவில் பிரதமர் மோடி கலந்து கொள்வதாக கூறப்படுகிறது.
இந்நிலையில், நேற்று திடீரென தமிழ்நாடு கவர்னர் ஆர்.என்.ரவியை அண்ணாமலை சந்தித்து பேசியுள்ளார்.
அப்போது அண்ணாமலை தனது பாதயாத்திரை தொடக்க விழா, நிறைவு விழாவுக்கு வருமாறு கவர்னருக்கு அழைப்பு விடுத்ததாக தகவல் வெளியாகியுள்ளது. அதே நேரத்தில் பெரிய இரும்பு பெட்டி ஒன்றையும் கவர்னரிடம் கொடுத்துள்ளார். அந்த இரும்பு பெட்டி குறித்த தகவல்களை, கவர்னரை சந்தித்த பின்பு வெளியில் வந்து பத்திரிகை நிருபர்களிடம் தெரிவிப்பார் என்ற எதிர்பார்ப்பு எழுந்தது. அதற்காக நிருபர்கள் அனைவரும் வெளியில் தயாராக நின்று கொண்டிருந்தனர். அண்ணாமலையும் வெளியில் வந்து பேட்டியளிப்பார் என்று காத்திருந்தனர். அதிமுக மாஜி அமைச்சர்களின் ஊழல் பட்டியல் குறித்து கேள்வி கேட்க நிருபர்கள் தயாராக இருந்தனர்.
மேலும் பாஜ நிர்வாகிகளை வேறு அறைக்கு அனுப்பி விட்டு 15 நிமிடம் அண்ணாமலை தனியாக ஆளுநரை சந்தித்துப் பேசியுள்ளார். அப்போது அதிமுக முன்னாள் அமைச்சர்களின் ஊழல் வழக்குகளுக்கு அனுமதி அளிக்காமல், அதற்கான பைலை தன்னிடமே வைத்துள்ளார். இது குறித்தும் இருவரும் ஆலோசனை நடத்தியதாக கூறப்படுகிறது. அதிமுக மாஜிக்களின் ஊழல் குறித்து கேள்வி கேட்க நிருபர்கள் தயாராக இருப்பது தெரிந்ததும், அண்ணாமலை பத்திரிகையாளர்களை சந்திக்காமல் வேக வேகமாக அங்கிருந்து புறப்பட்டு சென்று விட்டார். அதிமுக ஊழல் பட்டியல் எப்போது வெளியிடுவீர்கள் என்ற கேள்வியை நிருபர்கள் கேட்டால் என்ன பதில் சொல்வது என்பதை தவிர்ப்பதற்காக அவர் பத்திரிகையாளர்கள் சந்திப்பை புறக்கணித்துவிட்டு சென்று விட்டதாக அவரது ஆதரவாளர்கள் மத்தியில் பரபரப்பாக பேசப்படுகிறது.