அதிமுக நிர்வாகி கொலை: வாலிபர் கைது

சங்கரன்கோவில்: சங்கரன்கோவில் அருகே நேற்று காலை நடைபயிற்சி மேற்கொண்ட அதிமுக நிர்வாகி சரமாரி வெட்டி கொலை செய்யப்பட்டார். தென்காசி மாவட்டம், சங்கரன்கோவில் அருகே மேலநீலிதநல்லூரை சேர்ந்தவர் வெளியப்பன் (49). அரசு ஒப்பந்ததாரர். அதிமுக மாவட்ட பிரதிநிதி. இவர் மேலநீலிதநல்லூர் யூனியன் அலுவலகம் அருகே நேற்று காலை 6.30 மணிக்கு நடைப்பயிற்சி மேற்கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த மர்மக்கும்பல், அவரை அரிவாளால் சரமாரியாக வெட்டிவிட்டு தப்பியது. இதில் வெளியப்பன், சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

தகவலறிந்து சம்பவ இடத்தை தென்காசி எஸ்.பி. சீனிவாசன் நேரில் பார்வையிட்டு விசாரணை நடத்தினார். இதில் கடந்த சில தினங்களுக்கு முன் அப்பகுதியில் உள்ள ஒரு கோயிலில் நடந்த திருவிழாவின்போது வெளியப்பன் மற்றும் அவரது உறவினர்களுக்கும், அதே ஊரை சேர்ந்த முத்துப்பாண்டியின் மகன் பாலமுருகனுக்கும் (27) இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. அப்போது வெளியப்பனும், அவரது உறவினர்களும் பாலமுருகனை சரமாரியாக தாக்கியதாகக் கூறப்படுகிறது.

இதன் காரணமாக அவர்களுக்குள் முன்விரோதம் இருந்துள்ளது. அதன்பிறகு திருப்பூர் சென்ற பாலமுருகன், கடந்த இரு நாட்களுக்கு முன்புதான் ஊர் திரும்பியுள்ளார். இந்நிலையில் வெளியப்பன் வெட்டி படுகொலை செய்யப்பட்டதால் பாலமுருகனை பிடித்து போலீசார் விசாரணை நடத்தினர். அப்போது அவர், வெளியப்பனுடன் ஏற்பட்ட முன்விரோதம் காரணமாக சரமாரியாக வெட்டி கொலை செய்ததை ஒப்புக்கொண்டதாகக் கூறப்படுகிறது. இதையடுத்து அவரை கைது செய்த போலீசார், உடந்தையாக இருந்த கூட்டாளிகள் இருவரை தேடி வருகின்றனர்.

Related posts

நடத்தையில் ஏற்பட்ட சந்தேகத்தால் விபரீதம் அரிவாளால் வெட்டி மனைவி படுகொலை: கணவன் கைது, ஸ்ரீபெரும்புதூர் அருகே பயங்கரம்

பருவமழையை சமாளிக்க ஒக்கியம் மடுவு நீர்வழிப்பாதை தயார்: மெட்ரோ நிர்வாகம் தகவல்

வீட்டில் பதுக்கி வைத்து மது விற்ற பெண் கைது