சென்னை: அதிமுக முன்னாள் அமைச்சர் தங்கமணி டெங்குவால் பாதிக்கப்பட்டு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். தமிழகத்தில் தொடர்ந்து பெய்து வரும் கனமழையால் பொதுமக்களிடயே சளி, இருமல், காய்ச்சல் அதிகரித்து வருகிறது. அதுமட்டுமின்றி கொசுக்களின் இனப்பெருக்கம் அதிகளவில் காணப்படுகிறது. இதனால் டெங்கு போன்ற மழை கால நோய்கள் அதிகரித்து வருகிறது. இந்த பாதிப்புகளை தடுப்பதற்காக தமிழக அரசு சார்பில் பல்வேறு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
மேலும் வாரந்தோறும் 10 ஆயிரம் மருத்துவ முகாம் நடத்த திட்டமிட்டு செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில், அதிமுக முன்னாள் அமைச்சர் தங்கமணி லேசான காய்ச்சல் காரணமாக சென்னை கிரீம்ஸ் சாலையில் உள்ள அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கே அவரை பரிசோதனை செய்ததில் டெங்கு பாதிப்பு உறுதி செய்யப்பட்டது. டெங்கு உறுதி செய்யப்பட்டதால் அவருக்கு சிறப்பு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மேலும் தொடர்ந்து மருத்துவர்கள் அவரை கண்காணித்து வருகிறார்கள்.