அதிமுக மாஜி கவுன்சிலர் சரமாரி வெட்டி கொலை: சென்னையில் பதுங்கிய 3 பேர் கைது

கடலூர்: கடலூர் முதுநகர் அருகே அதிமுக முன்னாள் கவுன்சிலர் வெட்டி படுகொலை செய்யப்பட்டார். இதுதொடர்பாக சென்னையில் 3 வாலிபர்களை போலீசார் கைது செய்தனர். கடலூர் முதுநகர் அருகே வண்டிப்பாளையம் ஆலை காலனியை சேர்ந்தவர் புஷ்பநாதன்(35). அதிமுக முன்னாள் கவுன்சிலரான இவருக்கு மஞ்சுளா என்ற மனைவியும், 2 மகள்களும் உள்ளனர். புஷ்பநாதன் நேற்று முன்தினம் இரவு பைக்கில் புது வண்டிப்பாளையம் சூரசம்ஹார தெருவில் சென்றபோது சிலர் பைக்கில் பின்தொடர்ந்துள்ளனர்.

திடீரென அவர்கள் முன்னோக்கி வந்து வழிமறித்துள்ளனர். அவர்கள் கையில் அரிவாள் உள்ளிட்ட ஆயுதங்களை வைத்திருந்ததால் பதறிப்போன புஷ்பநாதன், பைக்கை போட்டு விட்டு தப்பி ஓடினார். ஆனால் அவர்கள் விரட்டி சென்று கத்தியால் சரமாரியாக வெட்டினர். இதில் ரத்த வெள்ளத்தில் சரிந்த புஷ்பநாதன் அங்கேயே பரிதாபமாக உயிரிழந்தார். பின்னர் மர்ம நபர்கள் பைக்குகளில் தப்பி சென்றனர்.
தகவலறிந்து முதுநகர் போலீசார் புஷ்பநாதனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கடலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இந்நிலையில், புஷ்பநாதனின் உறவினர்கள் கடலூர் அரசு மருத்துவமனை முன்பு சாலை மறியலில் ஈடுபட்டனர். போலீசார் அவர்களிடம் கொலையாளிகள் விரைவில் கைது செய்யப்படுவார்கள் என்று உறுதி அளித்தனர். இதை ஏற்று அவர்கள் கலைந்து சென்றனர். தனிப்படையினர் சிசிடிவி காட்சிகள் மற்றும் செல்போன் பதிவுகளை ஆய்வு செய்து கொலையாளிகளை தேடி வந்தனர். இதில், கொலையாளிகள் சென்னையில் பதுங்கி இருப்பது தெரியவந்தது. இதையடுத்து தனிப்படை போலீசார் நேற்று சென்னை சென்று, ஆலை காலனியை சேர்ந்த அஜய் (21), நேதாஜி (23) சந்தோஷ் (24) ஆகியோரை கைது செய்து, கொலை செய்ததற்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related posts

நீட் தேர்வு பற்றி தெளிவான முடிவு எடுக்க வேண்டும்: பிரேமலதா பேட்டி

அயோத்திக்கு சுற்றுலா ரயிலில் சென்ற நெல்லை, தூத்துக்குடியை சேர்ந்த 3 பக்தர்கள் வெப்ப அலையில் பலி: ஐஆர்சிடிசி அலட்சியம் என பயணிகள் குற்றச்சாட்டு

ஊர்க்காவல் படை வீரர் தேர்வுக்கு தாமதமாக வந்ததால் அனுமதி மறுப்பு புதுவை தலைமை செயலகம் முற்றுகை கண்ணீருடன் பெண்கள் சாலை மறியல்