* ரூ.2 கோடி ஒதுக்கியது கலைஞர் ஆழித்தேர் சீரமைக்க அதிமுக ஆட்சியில் நிதி ஒதுக்கீடா? பொய் பேசிய எடப்பாடி
நாகை மக்களவை தொகுதியில் போட்டியிடும் அதிமுக வேட்பாளரை ஆதரித்து திருவாரூர் தெற்குவீதியில் பொது செயலாளர் எடப்பாடி பழனிசாமி நேற்று முன்தினம் இரவு பிரசாரம் செய்தார். அப்போது அவர் பேசுகையில், ‘இரட்டை இலை சின்னத்தை முடக்குவதற்கு எத்தனையோ பேர் முயற்சி செய்தனர். அவர்களது முயற்சிகள் தூள் தூளாக்கப்பட்டது. இந்த சின்னத்தை எந்த கொம்பனாலும் தொட்டுக்கூட பார்க்க முடியாது. ஆரம்ப கட்டத்தில் அதிமுகவுடன் கூட்டணி வைத்ததால் தான் பாமகவுக்கு மாம்பழ சின்னம் கிடைத்தது. சீசனுக்கு தகுந்தாற்போல் மாம்பழம் மாறுவதை போல், தேர்தல் வரும்போது அந்த மாம்பழம் மாறி விடுகிறது. அதிமுக ஆட்சி காலத்தில் ஆழித்தேர் சீரமைக்க நிதி ஒதுக்கப்பட்டது,’ என்றார். திமுக ஆட்சி காலத்தின்போது மறைந்த முதல்வர் கலைஞர் ஆழித்தேர் சீரமைக்க ரூ.2 கோடி நிதி ஒதுக்கி நீண்ட நாட்களாக ஓடாமல் இருந்த தேரை ஓட வைத்தார். உண்மை இவ்வாறு இருக்க அதிமுக ஆட்சி காலத்தில் ஆழித்தேர் சீரமைக்க நிதி ஒதுக்கப்பட்டது எடப்பாடி பொய் பிரசாரத்தை செய்து உள்ளார்.
மதுரை தொகுதி பாஜ வேட்பாளராக ராம ஸ்ரீனிவாசன் போட்டியிடுகிறார். இவருக்கு ஆதரவாக நேற்று முன்தினம் பிரசாரம் செய்த அக்கட்சியின் எம்எல்ஏ வானதி சீனிவாசன், ‘தருமியை போல் சு.வெங்கடேசன் கேள்வி கேட்டு கொண்டே இருப்பவர். மீண்டும் அவரையே தேர்வு செய்யப்போகிறீர்களா’ எனக் கேள்வி எழுப்பியிருந்தார். இதற்கு பதில் அளிக்கும்விதமாக, பிரசாரத்தில் திமுக கூட்டணியின் மார்க்சிஸ்ட் வேட்பாளர் சு.வெங்கடேசன், ‘‘திருவிளையாடல் புராணத்தில் தருமியின் பக்கம் தான் இறைவனே நின்றார். அதிகாரத்தில் இருப்பவர்கள் தாங்கள் வைத்தது தான் சட்டம் என பேசியபோது, அதற்கு எதிராக தருமியின் குரல், இறைவனின் குரலாக எதிரொலித்தது மதுரை மண்ணில் தான். எனவே, அதிகாரத்தை கேள்வி கேட்கும் இடத்தை மதுரை எப்போதும் விட்டுக் கொடுக்காது. இது, மதுரையின் குரல் மட்டுமல்ல. தமிழகத்தின் குரல். தாய்த்தமிழின் குரல்’’ என பேசினார்.