தஞ்சை: அதிமுகவுடன் அமமுக இணையுமா என்கிற கேள்விக்கே இடம் இல்லை என டிடிவி தினகரன்தெரிவித்துள்ளார். இது தொடர்பாக தஞ்சையில் செய்தியாளர்களை சந்தித்து பேசிய அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன்; அதிமுக தொண்டர்கள் ஒன்றிணைந்து உண்மை நிலையை உணர்ந்து நல்ல முடிவை எடுக்கும் போது, அதுபற்றி நாங்கள் கலந்து பேசி முடிவு எடுப்போம். ஜெயலலிதாவின் தொண்டர்கள் ஒன்றிணைய வேண்டும் என்பதுதான் அனைவரது விருப்பம்.
ஒரு சில சுயநலவாதிகளின் எண்ணத்தால் ஜெயலலிதாவின் கட்சி அழிக்கப்பட்டு வருகிறது. இரட்டை இலை சின்னம் எடப்பாடியிடம் இருப்பதால், அதிமுக தொண்டர்கள் தங்களைத் தாங்களே ஏமாற்றிக் கொள்கின்றனர். அதிமுகவுக்கு சிறுபான்மையினர் வாக்களிக்காததால் அக்கட்சியின் வாக்கு விகிதம் குறைந்துள்ளது. 2019 தேர்தலில் அதிமுக பெற்ற 20 சதவீதத்தைவிட இந்த தேர்தலில் வாக்கு சதவீதம் குறைந்துள்ளது. எடப்பாடி பழனிசாமியால்தான் அதிமுக தொடர்ந்து 10 தேர்தல்களில் தோல்வியடைந்து அழிந்துவருகிறது.
RK நகர் தேர்தல் தொடங்கி தொடர்ந்து 10 தேர்தலில் அதிமுக தோல்வி அடைந்து வருகிறது. அதிமுகவுடன் அமமுகவை இணைக்கும் எண்ணம் இல்லை. அதிமுக தொண்டர்கள் ஒன்றிணைய வேண்டும் என்பதுதான் அனைவரது விருப்பம். அதிமுகவில் தவறான தலைமை உள்ள நிலையில் அங்கு இணைவது குறித்து கேட்பது தவறான கேள்வி என்று கூறினார்.