கரூர்: நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கரூரில் நேற்று அளித்த பேட்டி: தம்பி அண்ணாமலை மட்டும் திமுகவை பற்றி பேசுகிறார். அதிமுகவை பற்றி எதுவும் பேசுவதில்லை. அதிமுக என்ன புனிதர் கட்சியா? கறைபடாத கட்சியா? கூட்டணியில் இருந்தால் விட்டு விடுவாரா? நேர்மையாக பேச வேண்டும். கொடநாடு பிரச்னை குறித்து அண்ணாமலை பேசுவதே கிடையாது. கொடநாடு பிரச்னையில் எடப்பாடியை விசாரிக்க வேண்டும் என்ற கருத்தை வரவேற்கிறேன். செந்தில்பாலாஜி சிறையில் இருப்பது தனிப்பட்ட முறையில் எனக்கு வருத்தம் தான். அவர், அதிமுகவில் இருந்த போது நடந்த பிரச்னையை அமலாக்கத்துறை தற்போது கையில் எடுத்துள்ளது. இவ்வளவு காலம் பொறுத்து விட்டு, இப்போது தேவைப்படும் போது பழி வாங்குகிறார்கள். குற்றம் நடந்த போதே நடவடிக்கை எடுத்திருக்க வேண்டும். அதிமுகவில் 6 முன்னாள் அமைச்சர்கள் மீது வழக்கு உள்ளது. அதற்கு ஏன்? அமலாக்கத்துறையினர் நடவடிக்கை எடுக்கவில்லை. நடுநிலையாக இருக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.