சென்னை : தமிழக சட்டப்பேரவையில் இருந்து அதிமுக உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர்.எதிர்க்கட்சி தலைவர் பேசுவதை நேரலை செய்ய வலியுறுத்தி அமளியில் ஈடுபட்ட அதிமுகவினர் வெளிநடப்பு செய்தனர். தமிழக சட்டப்பேரவை கூட்டத் தொடரில் நேற்று முதல் காவல் துறை மானியக் கோரிக்கை மீது விவாதம் நடைபெற்று வருகிறது. சட்டப்பேரவையில் எதிர்க்கட்சி துணைத் தலைவர் இருக்கை விவகாரம் குறித்து எஸ்.பி. வேலுமணி பேப்பரை எடுத்து படித்தார்.சட்டப்பேரவையில் எழுந்து நின்று கையில் உள்ள பேப்பரை படித்த போது, அவருக்கு மைக் தருமாறு அதிமுகவினர் அமளியில் ஈடுபட்டனர். இதைத் தொடர்ந்து எதிர்க்கட்சித் தலைவர் பேசுவதை நேரலை செய்ய வலியுறுத்தி அமளியில் ஈடுபட்ட அதிமுகவினர் பேரவையில் இருந்து வெளியேறினர்.
இதற்கு பிறகு பேசிய சபாநாயகர் அப்பாவு,”.ஜனநாயக முறைப்படி அனைவருக்கும் வாய்ப்பு வழங்கி வருகிறோம். அரசு ஒளிவு மறைவு இல்லாமல் இயங்கி வருகிறது. படிப்படியாக நேரடி ஒளிபரப்பு செய்யப்படும் என்பதில் மாற்றுக்கருத்து இல்லை. எதிர்க்கட்சி தலைவர் பேசும்போது இரண்டு மணி நேரம் உணவு இடைவேளைக்கு கூட செல்லாமல் முதல்வர் அமர்ந்திருந்தார். அவையை விட்டு அதிமுக எம்.எல்.ஏ.,க்கள் சென்றது வருத்தமாகவும் வேதனையாகவும் உள்ளது. சட்டப்பேரவையில் அதிமுகவினர் செயல்பாடுகளை மக்கள் ஒருபோதும் மன்னிக்க மாட்டார்கள். இப்படி ஏன் செய்தீர்கள் என்று ஒரு வார்த்தை கூட சொல்லாமல் இருக்கக்கூடிய முதலமைச்சர் நமது முதலமைச்சர்,”என்றார்.