அதிமுக பகுதி செயலாளர் கொலை குற்றவாளிகளை உடனே கைது செய்ய வேண்டும்: எடப்பாடி வலியுறுத்தல்

சென்னை: அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை:
சேலம் மாநகர் மாவட்டம், கொண்டலாம்பட்டி பகுதி அதிமுக செயலாளர் ஆ.சண்முகம் நேற்று முன்தினம் இரவு அவரது வீட்டிற்கு சென்றுகொண்டிருந்தபோது வழிமறித்து கொடூரமாக படுகொலை செய்யப்பட்டுள்ளார். சண்முகம் சிறு வயதிலேயே அதிமுகவில் இணைந்து, சேலம் மாநகர் மாவட்டம், 55வது வட்ட செயலாளராகவும், தொடர்ந்து 22 ஆண்டுகளுக்கும் மேலாக கொண்டலாம்பட்டி பகுதி செயலாளராகவும் திறம்பட பணியாற்றியவர்.

மேலும், 2001-06 மற்றும் 2011-16 என்று இருமுறை சேலம் மாநகராட்சி, கொண்டலாம்பட்டி மண்டல குழு தலைவராக திறம்பட பணியாற்றி உள்ளார். உள்ளாட்சி தேர்தல், சட்டமன்ற தேர்தல், நாடாளுமன்ற தேர்தல் என அனைத்து தேர்தல்களிலும் முழு ஈடுபாட்டுடன் கட்சி பணியாற்றி மக்களிடத்திலும், கட்சி தொண்டர்களிடத்திலும் அன்பாக பழகி நன்மதிப்பை பெற்றவர். சிறந்த தொண்டரை இழந்துள்ளது மிகுந்த மன வேதனை அளிக்கிறது.

இந்த கொலை குற்றத்தில் சம்பந்தப்பட்ட அனைத்து குற்றவாளிகளையும் உடனடியாக கைது செய்து சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும். சண்முகத்தை இழந்து வாடும் குடும்பத்தினருக்கும், உறவினர்களுக்கும் ஆழ்ந்த இரங்கலையும் அனுதாபத்தையும் தெரிவித்துக்கொள்கிறேன். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Related posts

திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி. மஹுவா மொய்த்ரா மீது டெல்லி சைபர் கிரைம் போலீசார் வழக்கு பதிவு

தமிழகத்தில் அடுத்த 3 மணி நேரத்தில் 7 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்தில் மழைக்கு வாய்ப்பு

அனைத்து தரப்பு மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த தேவையான சேவைகளை கூட்டுறவு அமைப்புகள் சிறப்பாக செயல்படுத்தி வருகிறது: அமைச்சர் கேஆர்.பெரியகருப்பன் அறிவிப்பு