புதுடெல்லி: ஏஐ தொழில்நுட்பம் குறித்து அமெரிக்காவின் என்விடியாவின் தலைமை நிர்வாக அதிகாரி ஜென்சன் ஹூவாங்கு பிரதமர் மோடியை சந்தித்து பேசினார். உலகம் முழுவதும் ஏஐ தொழில்நுட்பம் பிரபலமடைந்து வருகிறது. இந்த நிலையில் அமெரிக்காவில் இந்த தொழில்நுட்பத்தில் பிரசித்தி பெற்ற அமெரிக்க மென்பொருள் நிறுவனமான என்விடியா சிஇஓ ஜென்சன் ஹுவாங் நேற்று டெல்லியில் பிரதமர் மோடியை சந்தித்து பேசினார். அப்போது இருவரும் செயற்கை நுண்ணறிவு உலகில் இந்தியாவின் நிலை குறித்து நீண்ட நேரம் ஆலோசனை நடத்தினர்.
இதுபற்றி பிரதமர் மோடி தனது டிவிட்டர் பதிவில், ‘என்விடியாவின் சிஇஓ ஜென்சன் ஹுவாங்குடன் ஒரு சிறந்த சந்திப்பை நடத்தினேன். செயற்கை நுண்ணறிவு உலகில் இந்தியா வழங்கும் வளமான சாத்தியக்கூறுகள் பற்றி நாங்கள் விரிவாகப் பேசினோம். இந்தத் துறையில் இந்தியா செய்துள்ள முன்னேற்றங்களை ஜென்சன் ஹுவாங் பாராட்டினார். மேலும் இந்தியாவின் திறமையான இளைஞர்களைப் பற்றி அவர் மகிழ்ச்சி தெரிவித்தார்’ என்று குறிப்பிட்டுள்ளார்.