நீர்வளத்துறை, ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை கட்டுப்பாட்டில் உள்ள ஏரி / குளம் / கண்மாய்களில் உள்ள வண்டல் மற்றும் களிமண் ஆகியவற்றை விவசாய பெருமக்கள் மற்றும் மண்பாண்டம் செய்பவர்கள் விவசாய பயன்பாட்டிற்கும் மற்றும் மண்பாண்டம் செய்வதற்கும் கட்டணமின்றி எடுத்துச் செல்லலாம் என்றும், இதன்மூலம் இவர்கள் பயன்பெறுவதோடு, ஏரி / குளம் மற்றும் கண்மாய்கள் ஆழப்படுத்தப்பட்டு அதிக மழை நீரைச் சேமித்திட இத்திட்டம் உதவும் என்றும் முதலமைச்சரால் 12.06.2024 அன்று அறிவிக்கப்பட்டது.
முதலமைச்சரின் ஆணைக்கிணங்க, இத்திட்டத்தினை எளிமையாக செயல்படுத்திட, தமிழ்நாடு சிறுகனிம சலுகை விதிகள், 1959-ல் அரசு ஆணை எண்.14, இயற்கை வளங்கள் துறை, நாள் 12.06.2024 அன்று திருத்தம் செய்யப்பட்டு இணையதளம் (tnesevai.tn.gov.in) மூலம் விண்ணப்பங்கள் பெறப்பட்டு, சரிபார்க்கப்பட்டு, மாவட்ட ஆட்சியர்களுக்கு பதிலாக வட்டாட்சியர்களால் அனுமதி வழங்க வழிவகை செய்யப்பட்டுள்ளது.
மேலும், பயனாளிகள் தங்களது கிராமத்தில் அமைந்துள்ள நீர்நிலைகள் உட்பட அவர்கள் சேர்ந்த வட்டத்தில் அமைந்துள்ள நீர்நிலைகளிலும் வண்டல் மற்றும் களிமண் ஆகியவற்றை எடுத்துச் செல்லலாம். நீர்வளத்துறை மற்றும் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையின் செயற்பொறியாளர்கள், புவியியல் மற்றும் சுரங்கத்துறையின் துணை இயக்குநர் / உதவி இயக்குநர், வட்டாட்சியர்கள், கிராம நிருவாக அலுவலர்கள் மற்றும் ஏரி, குளம் மற்றும் கண்மாய் பொறுப்பாளர்களுக்கு இத்திட்டத்தினை செயல்படுத்திட வழிகாட்டும் நெறிமுறைகள் இயற்கை வளங்கள் துறையால் 25.06.2024 அன்று வெளியிடப்பட்டது.
இத்திட்டத்தினை, முதலமைச்சர் காஞ்சிபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த 10 விவசாய பெருமக்கள் மற்றும் மண்பாண்டம் செய்பவர்களுக்கு அனுமதி ஆணைகளை வழங்கி, தொடங்கி வைத்தார். அதன்படி, இன்று முதல் விவசாய பெருமக்கள் மற்றும் மண்பாண்ட தொழில் செய்வோர் tnesevai.tn.gov.in என்ற இணையதளம் வழியாக விண்ணப்பித்து பயன்பெறலாம். இந்நிகழ்ச்சியில், நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன், தலைமைச் செயலாளர் சிவ் தாஸ் மீனா, இ.ஆ.ப., இயற்கை வளங்கள் துறை கூடுதல் தலைமைச் செயலாளர் க.பணீந்திர ரெட்டி, இ.ஆ.ப., புவியியல் மற்றும் சுரங்கத்துறை ஆணையர் எ.சரவணவேல்ராஜ், இ.ஆ.ப., மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
காணொலிக் காட்சி வாயிலாக வேலூர் மாவட்டத்திலிருந்து, நாடாளுமன்ற உறுப்பினர் து.மு. கதிர் ஆனந்த், மாவட்ட ஆட்சித் தலைவர் வே.இரா. சுப்புலெட்சுமி, இ.ஆ.ப., விருதுநகர் மாவட்டத்திலிருந்து சட்டமன்ற உறுப்பினர் ஏ.ஆர்.ஆர். ரகுராமன், மாவட்ட ஆட்சித் தலைவர் முனைவர் வீ.ப. ஜெயசீலன், இ.ஆ.ப., காஞ்சிபுரம் மாவட்டத்திலிருந்து மாவட்ட ஆட்சித் தலைவர் கலைச்செல்வி மோகன், இ.ஆ.ப., கடலூர் மாவட்டத்திலிருந்து மாவட்ட ஆட்சித் தலைவர் டாக்டர் அ. அருண் தம்புராஜ், இ.ஆ.ப., மேயர் ஆர். சுந்தரி, துணை மேயர், தாமரைச்செல்வன், திருவாரூர் மாவட்டத்திலிருந்து நாடாளுமன்ற உறுப்பினர் வை. செல்வராஜ், மாவட்ட ஆட்சித் தலைவர் தி. சாருஸ்ரீ, இ.ஆ.ப., மாவட்ட ஊராட்சி தலைவர் கோ. பாலசுப்பிரமணியன், திருவாரூர் நகர்மன்ற தலைவர் புவன பிரியா செந்தில், கோயம்புத்தூர் மாவட்டத்திலிருந்து மாவட்ட ஆட்சித் தலைவர் கிராந்தி குமார் பாடி, இ.ஆ.ப., மற்றும் அரசு உயர் அலுவலர்கள், விவசாய பெருமக்கள் கலந்து கொண்டனர்.