கோவை: கோவை வடவள்ளியை சேர்ந்தவர் கதிர்மதியோன் (60). சமூக ஆர்வலர். இவர் கடந்த 1996ல் தனது வீட்டின் மின் இணைப்புக்கு பெயர் மாற்ற மின்வாரிய அலுவலகத்தை அணுகினார். அதற்கு அதிகாரி ரூ.500 லஞ்சம் கேட்டுள்ளார். இதுபற்றி அவர், லஞ்ச ஒழிப்பு மற்றும் ஊழல் தடுப்பு போலீசில் புகார் அளித்தார். புகாரின்பேரில், லஞ்ச ஒழிப்பு போலீசார் கதிர்மதியோனிடம் 500 ரூபாயை வாங்கி அதில் ரசாயனம் தடவி லஞ்சம் கேட்ட அதிகாரியிடம் வழங்க கூறியுள்ளனர். இதையடுத்து அவர் சென்று கொடுத்தபோது மறைந்திருந்த போலீசார் அதிகாரியை கைது செய்தனர். அந்த பணத்தை ஆதாரமாக எடுத்துச் சென்றனர். அது நீதிமன்ற கட்டுப்பாட்டில் வைக்கப்பட்டது.
இது குறித்து கதிர்மதியோன் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்து, போலீசார் பணத்தை தராததால் தற்போது எனது 500 ரூபாய் செல்லாததாகிவிட்டது என தெரிவித்திருந்தார். இந்நிலையில் 28 ஆண்டுக்குப்பின் வழக்கு நிறைவடைந்ததையடுத்து நீதிமன்றத்தில் இருந்த 500 ரூபாய்க்கு பதிலாக கதிர்மதியோனுக்கு ஐந்து 100 ரூபாய் நோட்டுகள் வழங்கப்பட்டது.