புதுடெல்லி: 10 நாள் தியானத்தை முடித்து கொண்டு டெல்லி திரும்பிய முதல்வர் கெஜ்ரிவால் மக்கள் பணியை மீண்டும் தொடங்குவதாக தெரிவித்துள்ளார். டெல்லி முதல்வர் அர்விந்த் கெஜ்ரிவால் 19ம் தேதி முதல் 30ம் தேதி வரை 10 நாள் விபாசனா தியானத்துக்கு சென்றார். இதனால் டிச.21ம் தேதி அமலாக்கத்துறை விசாரணைக்கு ஆஜராகவில்லை. இந்நிலையில் பஞ்சாப் மாநிலம் ஹோஷியார்பூர் மாவட்டம் அருகே ஆனந்த்கரில் உள்ள தம்ம தாஜா விபாசனா தியான மையத்தில் 10 நாள் தியானத்தை முடித்து கொண்டு கெஜ்ரிவால் நேற்று டெல்லி திரும்பினார். இதற்கிடையே டெல்லி மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் வரும் 3ம் தேதி விசாரணைக்கு ஆஜராகும்படி கெஜ்ரிவாலுக்கு அமலாக்கத்துறை சம்மன் அனுப்பி உள்ளது. அதில் ஆஜராவாரா என்பது அப்போது தெரிய வரும்.