இந்த அரசு பொறுப்பேற்றபின் வரலாற்றுச் சாதனைகளாக 400 ஆண்டுகளுக்கு பின் கன்னியாகுமரி மாவட்டம், திருவட்டாறு, ஆதிகேசவ பெருமாள் கோயிலிலும், 300 ஆண்டுகளுக்கு பின் காஞ்சிபுரம் மாவட்டம், சாத்தனஞ்சேரி, கரியமாணிக்க வரதராஜபெருமாள் கோயிலிலும், 150 ஆண்டுகளுக்கு பின் ராணிப்பேட்டை மாவட்டம், தக்கோலம் கங்காதீஸ்வரர் கோயிலிலும், 123 ஆண்டுகளுக்கு பின் திருநெல்வேலி மாவட்டம், அரிகேசவநல்லூர், பெரியநாயகி சமேத அரியநாத சுவாமி கோயிலிலும், 110 ஆண்டுகளுக்கு பின் வேலூர் மாவட்டம், வெட்டுவானம், திரவுபதியம்மன் கோயிலிலும், 100 ஆண்டுகளுக்கு பின் 5 கோயில்களிலும், 90 ஆண்டுகளுக்கு பின் 3 கோயில்களிலும், 70 ஆண்டுகளுக்கு பின் 2 கோயில்களிலும், 50 ஆண்டுகளுக்கு பின் 15 கோயில்களிலும், 40 ஆண்டுகளுக்கு பின் 10 கோயில்களிலும் வெகுவிமரிசையாக குடமுழுக்கு நடத்தப்பட்டுள்ளது.
அதனைத் தொடர்ந்து, தொன்மையான கோயில்களில் ஒன்றான திருச்சி மாவட்டம், மணப்பாறை வட்டம், சீகம்பட்டி கிராமம், பூர்த்திகோவில், திருமுக்தீஸ்வரர் கோயிலில் திருப்பணிகள் மற்றும் மூன்று நிலை ராஜகோபுரம் அமைக்கும் பணிகள் நிறைவுற்று, சுமார் 100 ஆண்டுகளுக்குபின் இந்த கோயிலுக்கு குடமுழுக்கு வருகின்ற ஜூலை 12ம் தேதி வெகுவிமரிசையாக நடைபெற உள்ளது. இதற்கான குடமுழுக்கு பணிகள் மற்றும் யாகசாலை அமைக்கும் பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன. இதனால் அப்பகுதியை சேர்ந்த இறையன்பர்கள் மற்றும் பொதுமக்கள் மிகுந்த மகிழ்ச்சியோடு குடமுழுக்கு பணிகளில் தங்களை முழுமையாக ஈடுபடுத்திக் கொண்டுள்ளனர். இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.