இஸ்லாமாபாத்: ஆப்கானிஸ்தானில் கடந்த 2021ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் முதல் தலிபான் ஆட்சி நடந்து வருகிறது. அங்கு தலிபான் அரசு பெண்களுக்கு எதிரான பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. பெண்கள் பள்ளி, கல்லூரிகளுக்கு செல்ல தடைவிதிக்கப்பட்டுள்ளது. பெண்கள் தொண்டு அமைப்புகளிலும் பின்னர், பொழுபோக்கு தலங்களான பூங்கா, திரையங்குகளில் பணி புரிய தடைவிதித்தது. இதன் தொடர்ச்சியாக, தற்போது பெண்கள் அழகு நிலையங்களுக்கு தலிபான் அரசு தடைவிதித்து உள்ளதாக தலிபான் அரசின் செய்தி தொடர்பாளர் தெரிவித்துள்ளார். ஆனால் இது குறித்து எதுவும் தகவல் தர மறுத்த தலிபான் அரசின் நல்லொழுக்கத் துறை அமைச்சகத்தின் செய்தி தொடர்பாளர் முகமது சித்திக் அகிப் மகாஜர், சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வரும், 24ம் தேதியிட்ட அரசின் கடிதத்தை காண்பித்தார். அதில், காபூல் மற்றும் நாட்டில் உள்ள பிற மாகாணங்களில் பெண்கள் அழகு நிலையங்களுக்கு தலிபான் அரசு தடைவிதித்துள்ளது. இவர்கள் ஒரு மாதத்துக்குள் தங்களது கடையை மூட வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.