பொன்னேரி: ஒன்றிய அரசு நடைமுறைக்கு கொண்டு வந்துள்ள புதிய குற்றவியல் சட்டங்களை திரும்ப பெற வலியுறுத்தி வழக்கறிஞர்கள் கண்டன ஆர்ப்பாட்டம் ஈடுபட்டனர். ஒன்றிய அரசு இந்திய தண்டனைச் சட்டம், இந்திய குற்றவியல் நடைமுறை சட்டம், இந்திய சாட்சிய சட்டம் ஆகியவற்றில் மாற்றங்கள் செய்து புதிதாக பாரதிய நியாய சன்ஹிதா, பாரதிய நாகரிக் சுரக்க்ஷா சன்ஹிதா, பாரதிய சாக்ஷயா அதிநயம் என கொண்டு வந்துள்ளது. இந்த புதிய சட்டங்கள் நாடு முழுவதும் நேற்று ஜூலை 1ம் தேதி முதல் அமலுக்கு வந்துள்ளது.
ஒன்றிய அரசின் இந்த புதிய குற்றவியல் சட்டங்களை திரும்ப பெற வலியுறுத்தி பொன்னேரியில் நேற்று வழக்கறிஞர்கள் கருப்பு நாளாக அனுசரித்து வருகின்றனர். மாவட்ட கூடுதல் அமர்வு நீதிமன்றம், குற்றவியல் நீதிமன்றங்கள் என 6 நீதிமன்றங்களிலும் 500க்கும் மேற்பட்ட வழக்கறிஞர்கள் நீதிமன்ற புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
மேலும் பொன்னேரி சார்பு நீதிமன்ற வாயிலில் வழக்கறிஞர்கள் ஒன்று கூடி நேற்று கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஒன்றிய அரசு மறைமுகமாக சம்ஸ்கிருத திணிப்பில் ஈடுபடுவதாகவும், இந்திய அரசியலமைப்பு சட்டத்திற்கு எதிராக ஒன்றிய அரசு கொண்டு வந்துள்ள சட்டங்களை திரும்ப பெறும் வரை வழக்கறிஞர்கள் போராட்டம் ஓயாது என தெரிவித்தனர்.