திருச்சி: அரசு விளையாட்டரங்கில் விளம்பர பதாகை வைக்க அனுமதித்த திருச்சி மாவட்ட விளையாட்டு அலுவலரை சஸ்பெண்ட் செய்து கலெக்டர் பிரதீப்குமார் உத்தரவிட்டுள்ளார். திருச்சி அண்ணா விளையாட்டரங்கில் தமிழ்நாடு மாநில சீனியர் தடகளப்போட்டிகள் கடந்த 3 நாட்களாக நடைபெற்றது. இந்த நிலையில் இந்த மைதான வளாகத்துக்குள் தனிப்பட்ட அகாடமிகள் சார்பில் அதிமுக முன்னாள் சுகாதாரத்துறை அமைச்சர் சி.விஜயபாஸ்கரின் படத்துடன் விளம்பர பதாகைகள் வைக்கப்பட்டு இருந்தது. அரசுக்கு சொந்தமான இடத்தில் உரிய அனுமதியின்றி பதாகைகள் வைக்க அனுமதித்தது குறித்து மாவட்ட நிர்வாகத்தின் கவனத்துக்கு சென்றது. இதையடுத்து மாவட்ட கலெக்டர் பிரதீப்குமார், திருச்சி மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நலன் அலுவலர் வேல்முருகனை சஸ்பெண்ட் செய்து நேற்று அதிரடியாக உத்தரவிட்டார். மேலும் இந்த விவகாரம் குறித்து அதிகாரிகள் குழு விசாரணை நடத்தவும் உத்தரவிடப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதையடுத்து திருச்சி மாவட்ட விளையாட்டு அலுவலராக (பொ) கண்ணன் என்பவர் நியமிக்கப்பட்டுள்ளார்.