தங்கவயல்: மாநில அரசால் விவசாயிகளுக்கு மானியம் கொடுக்க பணம் இல்லை, ஆனால் விளம்பரத்திற்கு மட்டும் ரூ.200 கோடி செலவு செய்துள்ளதாக முன்னாள் முதல்வர் குமாரசாமி குற்றம்சாட்டியுள்ளார். கோலாரில் நடைபெற்ற தனியார் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற முன்னாள் முதல்வர் எச்.டி.குமாரசாமி காங்கிரஸ் அரசை அகற்ற வேண்டும் என்று அரசுக்கு எதிராக கடுமையாக விமர்சனம் செய்தார். நிகழ்ச்சியில் பங்கேற்ற பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், மாநில விவசாயிகள் நஷ்டத்தில் உள்ளனர். அவர்களுக்கு இழப்பீடு கொடுக்க பணம் இல்லை. ஆனால் விளம்பரத்திற்காக ரூ.200 கோடி செலவிடுகிறார்கள். யாருடைய பணத்தில் அரசு விளம்பரம் செய்கிறது. மாநில காங்கிரசின் மோசமான அரசு அகற்றப்பட வேண்டும். விளம்பர நிறுவனங்களுக்கு ரூ.200 கோடி வழங்கும் அரசுக்கு, விவசாயிகளுக்கு இழப்பீடு கொடுக்க பணம் இல்லையா. விவசாயிகளை நஷ்டத்தில் தவிக்க விட்டு சுய விளம்பரம் செய்வதா? கிரிஹலட்சுமி திட்டத்தில் மேலும் ரூ.2 ஆயிரம் என அரசு உத்தரவாதத்தை காட்டி கஜானாவை காலி செய்து விட்டார்கள் என்றார்.