சென்னை : சட்டப்பேரவை கூட்டத் தொடரில் இருந்து அதிமுக எம்எல்ஏக்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டதை கண்டித்து அக்கட்சியினர் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். கள்ளக்குறிச்சி விஷச்சாராய விவகாரம் தொடர்பாக சட்டப்பேரவையில் விவாதம் நடத்த வலியுறுத்தி தொடர் அமளியில் ஈடுபட்ட அதிமுக எம்எல்ஏக்கள் கூட்டத் தொடர் முடியும் வரை சஸ்பெண்ட் செய்யப்பட்டனர். இந்த நிலையில் அதிமுக எம்எல்ஏக்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டதை கண்டித்தும் கள்ளக்குறிச்சி விஷச் சாராய விவகாரத்தில் சிபிஐ விசாரணை கேட்டும் எடப்பாடி பழனிசாமி தலைமையில் அதிமுக எம்எல்ஏக்கள் சென்னை எழும்பூரில் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
எழும்பூரில் உள்ள ராஜரத்தினம் ஸ்டேடியத்தில் மாலை 5 மணி வரை உண்ணாவிரத போராட்டம் நடைபெற உள்ளது. இந்த முன்னாள் அமைச்சர்கள், திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் அதிமுக நிர்வாகிகள் பங்கேற்றுள்ளனர். அதிமுகவின் உண்ணாவிரதப் போராட்டம் அமைதியான முறையில் நடத்தப்பட வேண்டும், போராட்டம் நடக்கும் இடத்திற்கு எந்த காரணத்தை கொண்டும் வாகனங்களை கொண்டு வரக்கூடாது உள்ளிட்ட 23 கட்டுப்பாடுகளை காவல்துறை விதித்துள்ளது. மேலும் இந்த உண்ணாவிரதப் போராட்டத்தையொட்டி சுமார் 400 போலீசார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர்.