திட்டக்குடி: கடலூர் மாவட்டம் ராமநத்தத்தை அடுத்துள்ள கொரக்கவாடி கிராமத்தை சேர்ந்தவர் தங்கமணி(39). ஊராட்சி மன்ற துணை தலைவராக உள்ளார். இவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில் கொரக்கவாடி ஊராட்சி தலைவராக உள்ள சக்திவேல் (47) என்பவர், கடந்த 16.4.2022 முதல் 25.4.2022 வரை துணை தலைவரான என் கையெழுத்தை போலியாக போட்டு, ஊராட்சி மன்ற கணக்கில் இருந்து ரூ.2 லட்சத்து 70 ஆயிரத்து 950ஐ கையாடல் செய்திருப்பதாக கூறியிருந்தார். இதை தொடர்ந்து நீதிமன்ற உத்தரவின்பேரில் அந்த கையெழுத்தை சென்னையில் ஆய்வுக்கு அனுப்பி ஒப்பிட்டு பார்த்தபோது, கையெழுத்து போலி என நிரூபிக்கப்பட்டது. இதையடுத்து ராமநத்தம் போலீசார் வழக்கு பதிந்து கொரக்கவாடி அதிமுக ஊராட்சி மன்ற தலைவர் சக்திவேலை நேற்று கைது செய்தனர்.