கலை, அறிவியல் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை சிறப்பு பிரிவினருக்கு இன்று கலந்தாய்வு

சென்னை: கலை, அறிவியல் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கைக்கையில், சிறப்பு பிரிவினருக்கான கலந்தாய்வு இன்று தொடங்குகிறது. தமிழக உயர்கல்வித் துறையின் கல்லூரி கல்வி இயக்ககத்தின் கீழ், 164 அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில், ஒரு லட்சத்து 7 ஆயிரத்து 299 இளநிலை பட்டப்படிப்பு இடங்கள் உள்ளன. இந்த இடங்களில் மாணவர் சேர்க்கை ஆன்லைன் விண்ணப்ப பதிவு, கடந்த 6ம் தேதி தொடங்கி 24ம் தேதியுடன் நிறைவு பெற்றது. விண்ணப்ப பதிவில், 2 லட்சத்து 58 ஆயிரத்து 527 விண்ணப்பங்கள் குவிந்தன. இதில், 2 லட்சத்து 11 ஆயிரத்து 10 மாணவர்கள் விண்ணப்ப கட்டணம் செலுத்தி உள்ளனர். கட்டணம் செலுத்திய மாணவர்களின் விண்ணப்பங்கள் மட்டுமே ஏற்கப்படும் நிலையில், 2.11 லட்சம் மாணவர்கள் கலந்தாய்வில் பங்கேற்க உள்ளனர். இதையடுத்து, விண்ணப்பித்த மாணவர்களுக்கான தரவரிசைப் பட்டியல் அந்தந்த அரசுக் கல்லூரிகளுக்கு நேற்று அனுப்பி வைக்கப்பட்டது. கல்லூரிகள் தரவரிசைப் பட்டியலில் உள்ள மாணவர்களுக்கு சேர்க்கை தேதி தொடர்பான விவரங்களை செல்போனுக்கு குறுஞ்செய்தி வாயிலாக தெரிவிக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.

இதனைத் தொடர்ந்து, மாணவர் சேர்க்கைக்கான கலந்தாய்வுகள் இன்றுமுதல் தொடங்குகின்றன. முதல்கட்டமாக, மாற்றுத்திறனாளி மாணவர்கள், விளையாட்டு வீரர்கள், முன்னாள் ராணுவ வீரர்களின் பிள்ளைகள் ஆகியோருக்கான சிறப்பு ஒதுக்கீடு மாணவர் சேர்க்கை கலந்தாய்வு இன்று (28 மே) முதல் 30ம் தேதி வரை நடைபெறுகிறது. அதன்பிறகு, பொதுப்பிரிவு மாணவர்களுக்கான முதல்கட்ட கலந்தாய்வு அடுத்த மாதம் (ஜூன்) 10ம் தேதி முதல் 15ம் தேதி வரையிலும், இரண்டாம் கட்ட கலந்தாய்வு அடுத்த மாதம் 24ம் தேதி முதல் 29ம் தேதி வரையிலும் நடத்தப்பட உள்ளது. முதலாம் ஆண்டு மாணவர்களுக்கான வகுப்புகள் வரும் ஜூலை மாதம் 3ம் தேதி தொடங்குகின்றன. கூடுதல் விவரங்களை மாணவர்கள் /www.tngasa.in/ எனும் வலைதளத்தில் அறிந்து கொள்ளலாம் என்றும், ஏதேனும் சந்தேகம் இருப்பின் 04424343106 / 24342911 ஆகிய எண்களில் தொடர்பு கொண்டு விளக்கம் பெறலாம் என்றும் உயர்கல்வித் துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

 

Related posts

இங்கிலாந்தில் இந்தியா

20 ஆண்டுகளான காற்றாலைகளுக்கு 5 ஆண்டுகள் நீட்டிப்பு வழங்க திட்டம்: மின்வாரிய அதிகாரிகள் தகவல்

தங்கம் விலை ஒரே நாளில் சவரனுக்கு ரூ.480 உயர்ந்தது