வேட்பு மனுவில் சொத்துக்கள், படிப்பு விபரங்களை மறைத்த விவகாரம்; எடப்பாடி பழனிச்சாமியை தகுதி நீக்கம் செய்யக் கோரி வழக்கு: உயர் நீதிமன்றத்தில் விசாரணை தள்ளிவைப்பு


சென்னை: எடப்பாடி பழனிசாமியை தகுதி நீக்கம் செய்யக் கோரிய வழக்கின் விசாரணையை நவம்பர் 3ம் தேதிக்கு தள்ளிவைத்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சென்னை உயர் நீதிமன்றத்தில் பழனி தொகுதி முன்னாள் எம்எல்ஏ ஏ.சுப்புரத்தினம் தாக்கல் செய்த மனுவில், ‘‘கடந்த 1991, 2011, 2016 மற்றும் 2021ல் எடப்பாடி தொகுதியில் போட்டியிட்டவர். அவர் தேர்தல்களில் போட்டியிடுவதற்காக தாக்கல் செய்த வேட்புமனுவில் பல்வேறு தகவல்களை மறைத்துள்ளார். கடந்த 2021ல் நடந்த தேர்தலில் அவர் எடப்பாடி தொகுதியில் போட்டியிட்டார். அதற்காக அவர் தாக்கல் செய்த வேட்பு மனுவில் தனது மனைவி ராதாவின் சொத்து கணக்குகளை தாக்கல் செய்யவில்லை.

அவரது மனைவி பங்குதாரராக இருந்த பாலாஜி புளு மெட்டல் நிறுவனத்தின் மூலம் அவருக்கு ரூ.69 லட்சத்து 36,333 வருமானம் வந்துள்ளது. அதை எடப்பாடி பழனிசாமி தனது வேட்பு மனுவில் தெரிவிக்கவில்லை. அதுமட்டுமல்லாமல் எடப்பாடி பழனிசாமிக்கு நெடுங்குளம் கிராமத்தில் பல்வேறு சர்வே எண்களில் ஏராளமான விவசாய நிலங்கள் உள்ளன. கடந்த தேர்தலில் அவர் தனது வேட்புமனுவில் தனக்கு 13 நிலங்கள்தான் உள்ளன’’ என்று தெரிவித்திருந்தார். ஆனால், அவருக்கு சொந்தமான மேலும் 6 நிலங்கள் குறித்த தகவல்களை வேட்புமனுவில் மறைத்துவிட்டார். எடப்பாடி பழனிசாமியின் மனைவி ஹரிஷ் கிருபா, பாலாஜி புளு மெட்டல் என்ற இரு நிறுவனங்களில் பங்குதாரராக இருந்ததையும் அதன் மூலம் கிடைத்த வருமானத்தையும் வேட்பு மனுவில் தெரிவிக்கவில்லை.

அவர் தான் படித்த இளநிலை படிப்பில் (முடிக்கவில்லை) எந்த பிரிவில் படித்தார் என்பதையும் வேட்புமனுவில் தெரிவிக்கவில்லை. அவரது மனைவியின் பெயரில் எடப்பாடி தாலுகா சின்ன மணலி கிராமத்தில் 4200 சதுர அடி நிலமும், சேலம் தெற்கு தாலுகா தடாகபட்டி கிராமத்தில் 560 சதுர அடி நிலமும் உள்ளன. இதன் சந்தை மதிப்பை சரியாக தெரிவிக்கவில்லை. அவரது மனைவிக்கு சொந்தமாக ரூ.2 கோடியே 90 லட்சத்து 40 ஆயிரம் மதிப்புள்ள அசையா சொத்துக்கள் உள்ளன. எடப்பாடி பழனிசாமிக்கு நெடுங்குளம் கிராமத்தில் 7 ெஹக்டேர் நிலம் உள்ளது. அதன் சந்தை மதிப்பை வேட்பு மனுவில் குறிப்பிடவில்லை. கடந்த 2016-17 முதல் 2018-19வரை அவரது வருமானத்தை வேட்புமனுவில் தவறாக குறிப்பிட்டுள்ளார்.

அவரது வேட்புமனுவை உரிய முறையில் ஆய்வு செய்யாமல் வேட்புமனுவை தேர்தல் ஆணையம் ஏற்றுக் கொண்டுள்ளது. வேட்புமனுவில் தவறான தகவல்களை தந்ததன் மூலம் எடப்பாடி பழனிசாமி தேர்தல் விதிமுறைகளை மீறியுள்ளார். சேலம் மாநகர போலீஸ், எடப்பாடி பழனிசாமி மீது கடந்த 2021ல் பதிவு செய்து சேலம் 1வது குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள வழக்கையும் வேட்பு மனுவில் அவர் குறிப்பிடவில்லை. அதை உரிய முறையில் பரிசீலனை செய்யாமல் அவரை தேர்தலில் போட்டியிட தேர்தல் ஆணையம் அனுமதித்துள்ளது.எனவே, எந்த தகுதியின் அடிப்படையில் எடப்பாடி பழனிசாமி எம்எல்ஏவாக பதவி வகிக்கிறார் என்று விளக்கம் கேட்குமாறு உத்தரவிட வேண்டும்.

எடப்பாடி பழனிசாமியை தகுதி நீக்கம் செய்ய வேண்டும். அவர் எம்எல்ஏவாக இருந்த நாட்களில் அவர் பெற்ற சம்பளம் மற்றும் அலவன்ஸ் ஆகியவற்றை திரும்ப வசூலிக்க வேண்டும் என்று கோரியிருந்தார். இந்த மனு தலைமை நீதிபதி எஸ்.வி.கங்காபுர்வாலா, நீதிபதி பரதசக்கரவர்த்தி ஆகியோர் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் சார்பில் மூத்த வழக்கறிஞர் ஓம் பிரகாஷ், எடப்பாடி தரப்பில் மூத்த வழக்கறிஞர் எஸ்.ஆர்.ராஜகோபால், தேர்தல் ஆணையம் தரப்பில வழக்கறிஞர் நிரஞ்சன் ஆஜராகினர். அப்போது தலைமை நீதிபதி மனுதாரர் தேர்தல் ஆணையத்தை ஏன் அணுகவில்லை என்று கேட்டார். அதற்கு மூத்த வழக்கறிஞர் ஓம் பிரகாஷ், ‘தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்காததால் தான் வழக்கு தொடரப்பட்டுள்ளது என்றார்.

இதை கேட்ட நீதிபதிகள், வேட்பு மனுவில் சரியான தகவல்களை தராததால் பதவி நீக்கம் கோர முடியுமா?. பதவியில் இருக்கும் போது குற்றம் செய்திருந்தாலோ அல்லது எஸ்சி அல்லாமல் எஸ்சி ஒதுக்கீடு தொகுதியில் போட்டியிட்டாலோ பதவி நீக்கம் கோரலாம். ஆனால், உங்கள் வழக்கு தேர்தல் தொடர்பானது தேர்தல் வழக்காகும்’ என்றார். அதற்கு மனுதாரர் வழக்கறிஞர், ‘இதுபோன்ற வழக்குகளில் தகுதி நீக்கம் செய்யப்பட்டது தொடர்பான தீர்ப்புகள் உள்ளன. அவற்றை தாக்கல் செய்ய அனுமதி தர வேண்டும்’ என்றார். இதையடுத்து, இந்த வழக்கு தொடர்பான தீர்ப்புகளை தாக்கல் செய்யுமாறு உத்தரவிட்டு விசாரணையை நவம்பர் 3ம் தேதிக்கு நீதிபதிகள் தள்ளிவைத்தனர்.

Related posts

தேமுதிக காசு வாங்கும் கட்சியா? விஜயபிரபாகரன் பரபரப்பு பேச்சு

தேசத்திற்கு தந்தைகள் கிடையாது; மகன்கள் உள்ளனர்: பாஜக எம்.பி. கங்கனா ரனாவத் மீண்டும் சர்ச்சை பதிவு!!

சாதிவாரி கணக்கெடுப்பு ராமதாஸ் வலியுறுத்தல்