பிரதமர் மோடி தமிழகம் வர உள்ளதால் சென்னையில் நாளை எடப்பாடி பங்கேற்கும் பொதுக்கூட்டம் 31ம் தேதிக்கு ஒத்திவைப்பு

சென்னை: பிரதமர் மோடி தமிழகம் வர உள்ளதால் நாளை சென்னை, ஆர்.கே.நகரில் எடப்பாடி பழனிசாமி பங்கேற்கும் பொதுக்கூட்டம் 31ம் தேதிக்கு மாற்றப்பட்டுள்ளது. மறைந்த முன்னாள் முதல்வர் எம்ஜிஆரின் 107வது பிறந்த நாளை முன்னிட்டு அதிமுக சார்பில் பொதுக்கூட்டங்கள் அறிவிக்கப்பட்டன. நாளை (19-ந்தேதி) முதல் 21ம் தேதி மற்றும் 27, 28 ஆகிய 5 நாட்கள் அனைத்து மாவட்டங்களிலும் பொதுக்கூட்டங்கள் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டு வருகின்றன. அந்தந்த மாவட்ட செயலாளர்கள் இக்கூட்டத்தை ஒருங்கிணைத்து வருகின்றனர். சென்னை ஆர்.கே.நகர் தொகுதியில் நாளை (19-ந்தேதி) நடைபெறும் பொதுக்கூட்டத்தில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கலந்து கொண்டு சிறப்புறையாற்றுவார் என்று அறிவிக்கப்பட்டு இருந்தது. இதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வந்தது.

இந்த நிலையில் பிரதமர் நரேந்திர மோடி நாளை முதல் 3 நாட்கள் தமிழகத்தில் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார். சென்னையில் ‘கேலோ’ இந்திய விளையாட்டு போட்டியை அவர் தொடங்கி வைக்கிறார். இதனால் பாதுகாப்பு பணியில் ஆயிரக்கணக்கான போலீசார் ஈடுபடுகிறார்கள். அதனால் எடப்பாடி பழனிசாமி பங்கேற்கும் பொதுக்கூட்டத்தில் பாதுகாப்பு அளிப்பதில் சிரமம் ஏற்படும் என்பதால் பாதுகாப்பு நலன் கருதி கூட்டம் வருகிற 31ம் தேதிக்கு ஒத்தி வைக்கப்படுவதாக அதிமுக தலைமை கழகம் சார்பில் இன்று அறிவிக்கப்பட்டுள்ளது.

Related posts

காஞ்சிபுரத்தில் நடைபெற்ற திமுக பவள விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரை

திமுக பவளவிழா பொதுக்கூட்டத்தில் திமுக கூட்டணி கட்சி தலைவர்கள் உரை

சுற்றுலா பஸ் கவிழ்ந்து 15 மாணவ, மாணவியர் காயம்