சென்னை: முழுநேர முனைவர் பட்டப்படிப்பு பயிலும் ஆதிதிராவிடர், பழங்குடியினர் ஊக்கத்தொகை பெற விண்ணப்பிக்கலாம். இதுகுறித்து ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை இயக்குநர் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை: முழுநேர முனைவர் பட்டப்படிப்பு பயிலும் மாணவ – மாணவிகளுக்கான ஊக்கத்தொகை திட்டம் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை மூலம் செயற்படுத்தப்படுகிறது. அதன்படி, 2023-2024ம் கல்வியாண்டில் முழுநேர முனைவர் பட்டப்படிப்பு பயிலும் ஆதிதிராவிடர், பழங்குடியினர் மற்றும் மதம் மாறிய கிறித்துவ ஆதிதிராவிடர் இன மாணவ – மாணவிகளிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
திட்ட விதிமுறைகள் மற்றும் மாதிரி விண்ணப்பப்படிவம் www.tn.gov.in/forms/deptname/1 என்ற இணையதள முகவரியில் பதிவிறக்கி பயன்படுத்திக்கொள்ளும் வண்ணம் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து அனைத்து பல்கலைக்கழகங்களுக்கும் தகவல் அனுப்பப்பட்டுள்ளது. முழுமையாக பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் டிசம்பர் 31ம் தேதி மாலை 5.45 மணிக்குள், “இயக்குநர், ஆதிதிராவிடர் நல இயக்குநரகம், எழிலகம் (இணைப்பு), சேப்பாக்கம், சென்னை-600005” என்ற முகவரிக்கு வந்து சேரும் வண்ணம் அனுப்பி வைக்க வேண்டும். முந்தைய கல்வியாண்டு விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ள இயலாது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.