சென்னை: ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை செயலாளர் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை: ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை மூலம் ஒன்றிய அரசின் நிதி பங்கீட்டுடன் செயல்படுத்தப்படும் “போஸ்ட் மெட்ரிக் கல்வி உதவித்தொகை திட்டம்”, “ப்ரிமெட்ரிக் மற்றும் தூய்மை பணிபுரிவோர்களின் குழந்தைகளுக்கான கல்வி உதவித்தொகை திட்டம்”, “மாநில அரசின் சிறப்பு போஸ்ட் மெட்ரிக் கல்வி உதவித்தொகை திட்டம்”, “உயர்கல்வி சிறப்பு உதவித்தொகை திட்டம்”, “பெண் கல்வி ஊக்குவிப்பு திட்டம் போன்ற திட்டங்கள் தலையாய திட்டங்கள். இதில் 14 லட்சத்துக்கு மேற்பட்ட ஆதிதிராவிடர், பழங்குடியினர் மற்றும் கிறிஸ்தவ மதம் மாறிய ஆதிதிராவிடர் மாணவரகள் பயன் அடைவார்கள் என எதிர்பார்கப்படுகிறது.
2023-2024ம் கல்வியாண்டிற்கு புதுப்பித்தல் மாணவருக்கான விண்ணப்பங்கள், சென்ற ஆண்டு தரவு தளத்தில் இருந்து பதிவிறக்கம் செய்து https;//ssp.tn.gov.in என்ற இணையதளம் மூலம் பரீசீலிக்கப்பட்டு வங்கி கணக்கிற்கு கல்வி உதவித்தொகை வழங்கப்பட்டு வருகிறது. தற்போது 2023-2024ம் கல்வியாண்டில் புதிதாக சேர்க்கை பெற்ற மாணவர்கள் விண்ணப்பிக்க நேற்று (1ம் தேதி) முதல் மேற்காணும் இணையதளம் திறக்கப்பட்டுள்ளது. ஆதார் எண்ணை வங்கியுடன் இணைக்காத மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை வழங்க இயலாது. இதை தெரிவித்து அவர்களை கல்வி உதவித்தொகைக்கு விண்ணப்பிக்க அறிவுறுத்துமாறு தொடர்புடைய கல்லூரி, பள்ளி முதல்வர்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.