அள்ளிக் கொடுக்கும் ஆடி வெள்ளி; வறுமை நீக்கும் மகாலட்சுமி பூஜை செய்வது எப்படி?

மகாலட்சுமி ஒவ்வொரு வீட்டிலும் வாசம் செய்ய வருவதால் மாலை நேரத்தில் விளக்கேற்றுவார்கள். அதேபோல வெள்ளிக்கிழமையன்று மாலை 6:00 மணி க்கு மேல் மகாலட்சுமி பூஜை செய்வது மிகவும் உகந்தது.

ஆடி மாதத்தினுடைய வெள்ளிக்கிழமை அன்று நாம் செய்யக்கூடிய மகாலட்சுமி பூஜையின் வழிமுறைகளைப் பார்க்கலாம்.எவ்வளவு வறுமை நிலையில் இருந்தாலும், சீரும் சிறப்பும் பெற்றி உயர்ந்த செல்வந்தராக மாற்ற முடியும் என்ற நம்பிக்கையோடு இந்த பூஜையை நீங்கள் செய்யலாம்.

வசதி இருப்பவர்கள் தங்கக் காசுகளால் கூட பூஜை செய்வார்கள். ஆனால், மகாலட்சுமியின் அருளைப் பெற, அன்புடன், தூய்மையான மனதுடன், பக்தியுடன் செய்தாலே போதும். எனவே, உங்கள் வசதிக்கு ஏற்றவாறு பூஜைக்கான பொருட்களை பயன்படுத்தலாம்.

பூஜைக்கான முதல் நாளே வீட்டில் நன்றாக கழுவி, சுத்தம் செய்து வைத்துக் கொள்ளுங்கள். மகாலட்சுமி பூஜைக்கு, அம்மனின் திருவுருவப் படம் ஒன்று தேவை. படம் எந்த அளவில் வேண்டுமானாலும் இருக்கலாம். படத்தை நன்றாகத் துடைத்து, சந்தனம், மஞ்சள் மற்றும் குங்குமம் இட்டு, தயாராக வைத்திருங்கள்.

மகாலட்சுமி பூஜைக்குத் தேவையான பொருட்கள்

செந்தாமரைப் பூ மகாலட்சுமிக்கு மிகவும் உகந்தது. பூஜைக்கு தேவையான பொருட்களில், வசதி, வாய்ப்புள்ளவர்கள், செந்தாமரை மலர் கிடைக்கும் என்றால், அதையும் சேர்த்துக் கொள்ளுங்கள். இல்லையென்றால், மல்லிகை, சாமந்தி, அரளிப் பூ என்று எந்த மலரையும் அம்மனுக்கு மாலையாக சாற்றலாம். சிறியதாக ஒரு கலசத்தில் அல்லது கலசம் இல்லாதவர்கள் பஞ்ச பாத்திரம் உத்தரணியில், தூய்மையான நீர் பிடித்து, ஒரு சிட்டிகை அளவு ஏலக்காய் பொடி, பச்சை கற்பூரம் பொடி மற்றும் மஞ்சள் தூள் ஆகிய மூன்றையும் சேர்க்க வேண்டும்.

அதை அப்படியே உள்ளங்கையில் வைத்து, வறுமை நீங்க வேண்டும், பணம் வந்தாலும் அதை விட செலவுகள் அதிகமாக உள்ளது, கிடைத்தும் தங்குவதில்லை, செல்வம் பயனுள்ளதாக இருக்க வேண்டும் என்று உங்கள் பிரச்னைக்கு என்ன தீர்வு தேவையோ, உங்கள் தேவையை மனதாரக் கூறி, கண் மூடி, வேண்டி, பூஜைக்குத் தேவையான பொருட்களுடன் வைத்து விடுங்கள். அடுத்ததாக, அர்ச்சனை செய்ய 108 காசுகள் (அல்லது பூக்கள்) மற்றும் குங்குமம். நைவேத்தியமாக வைக்க வேண்டிய பொருள் – பெருநெல்லிக்காய்.

மகாலட்சுமி பூஜை செய்முறை

ஒரு நெய் விளக்கை ஏற்றி, குங்கும அர்ச்சனை செய்து பூஜையைத் தொடங்குங்கள். வறுமையின் பிடியில் சிக்கியிருந்த ஒரு குடும்பத்திற்கு மகாலக்ஷ்மியின் அனுக்ரகம் வேண்டி நெல்லிக்காயை அம்பாளுக்கு வழங்கி, ஆதிசங்கரர் பாடிய ஸ்தோத்திரம் தான் கனகதாரா ஸ்தோத்திரம். நீங்கள் பூஜைக்கான பொருட்கள் மற்றும் நைவேத்தியத்தை தயார் செய்த பிறகு கனகதாரா ஸ்தோத்திரத்தை பாராயணம் செய்ய வேண்டும். அம்மனுக்கு வைத்த பெருநெல்லிக்காய்/நெல்லிக்காய்களை பூஜை செய்த தினத்தன்று அப்படியே இருக்க வேண்டும்.

அடுத்த நாள் காலை, அந்த நெல்லிக்காயில் ஒரு நெல்லிக்காயை நீங்கள் சாப்பிட வேண்டும். மீதமுள்ளவற்றை மற்றவர்களுக்கு தானம் கொடுக்க வேண்டும். அதே போல, பூஜையில் வைத்த நெல்லிக்காயைப் பயன்படுத்தி, நெல்லிக்காய் சாதம் செய்து நீங்களும் சாப்பிட்டு, அதை மற்றவர்களுக்கு பிரசாதமாக வழங்கலாம்.

மகாலட்சுமி பூஜை செய்ய உகந்த நேரம்

மகாலட்சுமி ஒவ்வொரு வீட்டிலும் வாசம் செய்ய வருவதால் மாலை நேரத்தில் விளக்கேற்றுவார்கள். அதேபோல வெள்ளிக்கிழமையன்று மாலை 6:00 மணி க்கு மேல் மகாலட்சுமி பூஜை செய்வது மிகவும் உகந்தது.

Related posts

குறைகளற்ற நிறைவான வாழ்வருளும் தேவி

திருக்கண்ணமங்கை பக்தவத்சலப் பெருமாள்

கருவூர்த் தேவர்