Tuesday, August 20, 2024
Home » ஆடி மாத அம்மன் கோயில்களுக்கான முதற்கட்ட ஆன்மிகப் பயணம் 19ல் தொடக்கம்: அமைச்சர் சேகர்பாபு தகவல்

ஆடி மாத அம்மன் கோயில்களுக்கான முதற்கட்ட ஆன்மிகப் பயணம் 19ல் தொடக்கம்: அமைச்சர் சேகர்பாபு தகவல்

by MuthuKumar

சென்னை: மூத்த குடிமக்கள் பயன்பெறும் வகையில் ஆடி மாத அம்மன் கோயில்களுக்கான முதற்கட்ட ஆன்மிகப் பயணம் வரும் 19ம் தேதி தொடங்கப்படும் என அமைச்சர் சேகர்பாபு தகவல் தெரிவித்துள்ளார்.

2024-2025ம் நிதியாண்டிற்கான இந்து சமய அறநிலையத்துறை மானியக் கோரிக்கையின்போது வெளியிடப்பட்ட அறிவிப்பில், “ஆடி மாதத்தில் பிரசித்தி பெற்ற அம்மன் கோயில்களுக்கும், புரட்டாசி மாதத்தில் பிரசித்தி பெற்ற வைணவத் கோயில்களுக்கும் வயது மூப்பின் காரணமாகவும், பொருளாதார வசதியின்மை காரணமாகவும், இறை தரிசனம் கிடைக்க இயலாத 60 வயது முதல் 70 வயதிற்கு உட்பட்ட, தலா 1,000 பக்தர்கள் அழைத்து செல்லப்படுவர். இதற்கான செலவினத் தொகை ரூ.50 லட்சம் அரசு நிதியாக வழங்கப்படும்“ என அறிவிக்கப்பட்டது.

இந்த அறிவிப்பினை நிறைவேற்றிடும் வகையில், சென்னை, தஞ்சாவூர், கோயம்புத்தூர், திருச்சி, மதுரை மற்றும் திருநெல்வேலி ஆகிய மண்டலங்களை தலைமையிடமாக கொண்டு புகழ்பெற்ற அம்மன் கோயில்களுக்கு ஆடி மாதத்தில் 1,000 மூத்த குடிமக்கள் கட்டணமின்றி ஆன்மிகப் பயணம் அழைத்துச் செல்ல அறிவிப்பு வெளியிடப்பட்டு, பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அந்தந்த மண்டலங்களில் 17ம் தேதிக்குள் திரும்ப வழங்கிட வேண்டுமென அறிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி, மூத்த குடிமக்களிடமிருந்து விண்ணப்பங்கள் பெறப்பட்டு வருகின்றன.

ஆடி மாத அம்மன் கோயில் ஆன்மிகப் பயணத்தில் பங்கேற்கும் மூத்த குடிமக்கள் சென்னை மண்டலத்தில் மயிலாப்பூர், கற்பகாம்பாள் கோயில், பாரிமுனை காளிகாம்பாள் கோயில், திருவொற்றியூர் வடிவுடையம்மன் கோயில், மாங்காடு காமாட்சியம்மன் கோயில், திருவேற்காடு தேவி கருமாரியம்மன் கோயில் ஆகிய கோயில்களுக்கும்,

திருச்சி மண்டலத்தில் உறையூர் வெக்காளியம்மன் கோயில், உறையூர் கமலவள்ளி நாச்சியார் கோயில், திருவானைக்காவல் அகிலாண்டேஸ்வரி கோயில், சமயபுரம் மாரியம்மன் கோயில், சமயபுரம் உஜ்ஜையினி மாகாளியம்மன் கோயில் ஆகிய கோயில்களுக்கும்,

மதுரை மண்டலத்தில் மதுரை மீனாட்சியம்மன் கோயில், வண்டியூர் மாரியம்மன் கோயில், மடப்புரம் காளியம்மன் கோயில், அழகர்கோவில், ராக்காயியம்மன் கோயில், சோழவந்தான் ஜனக மாரியம்மன் கோயில் ஆகிய கோயில்களுக்கும்,

கோயம்புத்தூர் மண்டலத்தில் கோயமுத்தூர் கோனியம்மன் கோயில், பொள்ளாச்சி மாரியம்மன், அங்காளம்மன் கோயில், ஆனைமலை மாசாணியம்மன் கோயில், சூலக்கல் மாரியம்மன் கோயில், கோயமுத்தூர் தண்டுமாரியம்மன் கோயில் ஆகிய கோயில்களுக்கும்,

தஞ்சாவூர் மண்டலத்தில் தஞ்சாவூர் பெரியகோயில் வராகியம்மன் கோயில், தஞ்சாவூர் பங்காரு காமாட்சியம்மன் கோயில், புன்னைநல்லூர், மகா மாரியம்மன் கோயில், திருக்கருகாவூர் கர்ப்பக ரட்சாம்பிகை கோயில், பட்டீஸ்வரம் துர்கையம்மன் கோயில் ஆகிய கோயில்களுக்கும், திருநெல்வேலி மண்டலத்தில் கன்னியாகுமரி பகவதியம்மன் கோயில், முப்பந்தல், இசக்கியம்மன் கோயில், சுசீந்திரம் ஒன்னுவிட்ட நங்கையம்மன் கோயில், மண்டைக்காடு பகவதியம்மன் கோயில், குழித்துறை சாமுண்டியம்மன் கோயில் ஆகிய கோயில்களுக்கும் அழைத்துச் செல்லப்படவுள்ளனர்.

ஆடி மாத அம்மன் கோயில் முதற்கட்ட ஆன்மிகப் பயணமானது 6 மண்டலங்களில் வருகின்ற 19ம் தேதி தொடங்குகிறது. இந்த ஆன்மிகப் பயணத்தில் பங்கேற்கும் மூத்த குடிமக்களுக்கு சிறப்பு தரிசனத்துடன் உணவு, பயணவழிப் பை மற்றும் அந்தந்த கோயில்களின் பிரசாதங்களும் வழங்கப்படுகின்றன. மேலும், அவர்களுக்கு உதவியாக அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள் உடன் செல்கின்றனர் என இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார்.

You may also like

Leave a Comment

17 − four =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi