சட்டப்பேரவையில் நேற்று கோபிச்செட்டிபாளையம் கே.ஏ.செங்கோட்டையன் (அதிமுக): பண்ணாரி அம்மன் கோயிலில் உள்ள வனத்துறைக்கு சொந்தமான இடத்தை கோயில் நிர்வாகத்துக்குதர வேண்டும் என்றார். வனத்துறை அமைச்சர் மதிவேந்தன் பேசியதாவது: பண்ணாரி அம்மன் கோயில் ஈரோடு மாவட்டம் குத்தியாலத்தூர் காப்புக்காட்டில் அமைந்துள்ளது. இப்பகுதி சத்தியமங்கலம் புலிகள் காப்பக வெளிமண்டலத்தில் அமைந்துள்ளது. இந்த கோயிலில் ஆண்டுதோறும் பங்குனி மாதத்தில் குண்டம் திருவிழா நடைபெற்று வருகிறது.
இந்த கோயிலுக்கு ஏற்கனவே 20 ஏக்கர் வனநிலம் வழங்கப்பட்டுள்ளது. தற்போது கூடுதலாக 10 ஹெக்டேர் நிலம் கேட்கிறார்கள். இதற்கு ஈடாக இரண்டு மடங்கு மாற்றாக குத்தியாலத்தூர் புறம்போக்கு நிலம் தேர்வு செய்துள்ளனர். மத்திய சுற்றுச்சூழல், வனம் மற்றும் பருவநிலை மாற்ற அமைச்சக வழிகாட்டுதல்படி காடு வளர்ப்பிற்கு அந்த நிலம் உகந்ததல்ல. மாற்று இடம் மரம் நடுவதற்கு உகந்ததாக இருந்தால் அதுகுறித்து ஆய்வு செய்யப்படும்.