ஊத்துக்கோட்டை: தண்டலம் கிராமத்தில் அரசு உயர்நிலைப்பள்ளியில் ரூ.78 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்ட கூடுதல் வகுப்பறையை டி.ஜெ.கோவிந்தராஜன் எம்எல்ஏ திறந்து வைத்தார். பெரியபாளையம் அருகே தண்டலம் கிராமத்தில் ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி திட்டத்தின் கீழ் அரசு உயர்நிலைப்பள்ளியில் 2023 – 24 கும்மிடிபூண்டி சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதி ரூ.78 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்ட கூடுதல் வகுப்பறை கட்டிடம் திறப்பு விழா நேற்று நடந்தது.
இதில் பள்ளியின் பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் கிருஷ்ணமூர்த்தி தலைமை தாங்கினார். ஊராட்சி மன்ற தலைவர் புவனேஸ்வரி ரவி வரவேற்புரையாற்றினார். மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் ரவிச்சந்திரன், மாவட்ட கல்வி அலுவலர் முகமது அப்துல்லா, பொதுப்பணித்துறை செயற்பொறியாளர் விஜய் ஆனந்த் ஆகியோர் முன்னிலை வகித்தனர். சிறப்பு அழைப்பாளராக டி.ஜெ.கோவிந்தராஜன் எம்எல்ஏ கலந்துகொண்டு, பள்ளிக்கட்டிடத்தை திறந்து வைத்தார்.
மேலும் அவர் தண்டலம் அரசு உயர்நிலைப் பள்ளியை மேல்நிலை பள்ளியாக தரம் உயர்த்த நடவடிக்கை எடுக்கப்படும், பள்ளிக்கு சுற்றுச்சுவர் மற்றும் கலையரங்கம் கட்டித்தர நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்தார். நிகழ்ச்சியில் எல்லாபுரம் தெற்கு ஒன்றிய செயலாளர் சத்தியவேலு, பொதுக்குழு உறுப்பினர் ராமமூர்த்தி, ரவிக்குமார், மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் லோகேஷ், விளையாட்டு மேம்பாட்டு அணி அமைப்பாளர் ராஜேஷ், உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர். முன்னாள் ஊராட்சி தலைவர் ரவி நன்றி கூறினார்.