கோவை, ஆக. 15: சுதந்திர தினம் அரசு விடுமுறை நாள் என்பதால் பலர், கூடுதலாக ஒரு நாள் அலுவலக விடுப்பு எடுத்தும், குழந்தைகளுக்கு பள்ளி விடுமுறை எடுத்தும் சொந்த ஊர்களுக்கு செல்ல திட்டமிட்டு உள்ளனர். இதனால், வரும் 18-ம் தேதி வரை பஸ்கள், ரயில்களில் முன்பதிவு டிக்கெட்டுகள் முடிந்துவிட்டது. சிறப்பு ரயில்களிலும் முன்பதிவுகள் முடிந்துவிட்டன. வெளியூர் செல்பவர்களின் எண்ணிக்கை அதிகமாக இருப்பதால் அரசு போக்குவரத்து கழகம் சார்பில் கோவையில் இருந்து சென்னை உள்ளிட்ட பகுதிகளுக்கு செல்ல கூடுதல் பஸ்கள் நேற்று முதல் இயக்கப்பட்டு வருகிறது. இதே போல் ஈரோடு, சேலம், கரூர், திருச்சி, மதுரை உள்ளிட்ட பகுதிகளுக்கு தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் சார்பில் ஏற்கனவே இயக்கப்பட்டு வரும் பஸ்களுடன் சேர்த்து கூடுதலாக 55 பஸ்கள் இயக்கப்பட்டு வருகிறது. இந்த சிறப்பு கூடுதல் பஸ்கள் கூட்ட நெரிசலை குறைக்கும் வகையில் பயணிகள் வசதிக்காக இன்று முதல் 18-ம் தேதி வரை இயக்கப்படுகிறது.