திருவனந்தபுரம்: மலையாள சினிமா டைரக்டர் பாலச்சந்திர மேனன் ஏராளமான படங்களுக்கு கதை, திரைக்கதை, வசனம் எழுதி, இயக்கி நாயகனாகவும் நடித்துள்ளார். இந்நிலையில் கடந்த 2007ம் ஆண்டு இவர் இயக்கி நடித்த தே இங்கோட்டு நோக்கியே என்ற படத்தில் நடித்த ஒரு நடிகை, பாலச்சந்திர மேனன் மீது பாலியல் புகார் கூறியது பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்தப் படத்தின் படப்பிடிப்பின் போது ஓட்டலில் தங்கியிருந்த தன்னை பாலச்சந்திர மேனன் அறைக்கு வரவழைத்து பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டதாக அந்த நடிகை சிறப்பு விசாரணைக் குழுவிடம் புகார் அளித்தார். இதைத் தொடர்ந்து திருவனந்தபுரம் கன்டோன்மென்ட் போலீசார் டைரக்டர் பாலச்சந்திர மேனன் மீது இபிகோ 354, 509, 506 ஆகிய பிரிவுகளில் வழக்கு பதிவு செய்துள்ளனர். விரைவில் அவரிடம் போலீசார் விசாரணை நடத்த உள்ளனர்.