திருமலை: ஆந்திர மாநில அமைச்சர் ரோஜாவை நடிகை ரம்யாகிருஷ்ணன் சந்தித்து பேசினார். திருப்பதி ஏழுமலையான் கோயிலில் சுவாமி தரிசனம் செய்ய நடிகை ரம்யாகிருஷ்ணன் நேற்று வந்தார். விஐபி தரிசனத்தில் சுவாமி தரிசனம் செய்தார். பிறகு அவருக்கு திருமலை திருப்பதி தேவஸ்தான அதிகாரிகள் கோயிலில் உள்ள ரங்கநாதர் மண்டபத்தில் லட்டு உள்ளிட்ட தீர்த்த பிரசாதங்களை வழங்கினர். மேலும், வேத பண்டிதர்கள் மூலம் வேத ஆசீர்வாதம் செய்து வைக்கப்பட்டது. தொடர்ந்து, நினைவு பரிசாக சுவாமி புகைப்படமும் வழங்கப்பட்டது. பின்னர் அவர் புத்தூர் அடுத்த நகரியில் உள்ள நடிகையும் ஆந்திர மாநில அமைச்சருமான ரோஜாவின் வீட்டுக்கு சென்றார்.
அவரை ரோஜாவும் அவரது கணவரும் சினிமா டைரக்டருமான ஆர்.கே.செல்வமணி ஆகியோர் பூங்கொத்து மற்றும் நினைவு பரிசு வழங்கி வரவேற்றனர். அப்போது இருவரும் பழைய நினைவுகளை பகிர்ந்து கொண்டனர். இதுகுறித்து அமைச்சர் ரோஜா சமூக வலை தளத்தில் வெளியிட்டுள்ள தகவலில், நாங்கள் இருவரும் சினிமா துறையில் பல ஆண்டுகளாக பணியாற்றியுள்ளோம். இருவரும் நல்ல தோழிகளாக பழகினோம். தற்போது ரம்யா ஏழுமலையானை சந்தித்துவிட்டு எங்கள் வீட்டுக்கு வந்து பழைய நினைவுகளை பகிர்ந்து கொண்டது மகிழ்ச்சியாக உள்ளது’ என்று தெரிவித்துள்ளார்.