சென்னை: காதலில் சொதப்புவது எப்படி, மாரி உள்ளிட்ட படங்களை இயக்கியவர் பாலாஜி மோகன். ஏழாம் அறிவு, ராஜாராணி உள்ளிட்ட படங்களில் நடித்தவர் தன்யா பாலகிருஷ்ணா. இருவரும் திருமணம் செய்து வாழ்ந்து வருகின்றனர். இந்நிலையில், வெப் சீரிஸ்களில் நடிக்கும் தெலங்கானாவைச் சேர்ந்த நடிகை கல்பிகா கணேஷ் என்பவர், தங்கள் திருமணம் மற்றும் தனிப்பட்ட வாழ்க்கை குறித்து யூடியூப்பில் அவதூறு பரப்புவதாகவும் அதை நீக்க வேண்டும் எனவும் பாலாஜி மோகன் தம்பதி ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்திருந்தனர். மனுவில், தங்களின் தனிப்பட்ட வாழ்க்கை குறித்து அவதூறு கருத்துகளை வெளியிட கல்பிகா கணேஷுக்கு தடை விதிக்க வேண்டும். இழப்பீடாக ஒரு கோடி வழங்க வேண்டும் என்று கோரியிருந்தனர்.
மனுவை விசாரித்த நீதிமன்றம், இருவர் குறித்தும் அவதூறு கருத்துகளை வெளியிட தடை விதித்து உத்தரவிட்டது. இந்த வழக்கு நீதிபதி குமரேஷ் பாபு முன்பு நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, நடிகை கல்பிகா கணேஷ் தரப்பில், இருவர் குறித்தும் பதிவேற்றிய வீடியோக்களை நீக்கிவிட்டதாகவும், இதுகுறித்து மன்னிப்புக்கோரிய வீடியோ பதிவை டிவிட்டர் மற்றும் பேஸ்புக்கில் வெளியிட்டுள்ளதாகவும் தெரிவித்தார். அதற்கு, பாலாஜி மோகன் தரப்பில் வழக்கறிஞர் விஜயன் சுப்ரமணியன் ஆஜராகி, கல்பிகா கணேஷ் மன்னிப்புக்கோரி வெளியிட்ட வீடியோவை நீக்கக் கூடாது. சமூக வலைதள கணக்குகளை செயலிழக்க செய்யக்கூடாது என்று வாதிட்டார். இதையடுத்து, நீதிபதி வழக்கை முடித்து வைத்து உத்தரவிட்டார்.