கோவை: தமிழ் திரைப்பட நடிகர் விஜய் சேதுபதி, பசும்பொன் முத்துராமலிங்க தேவரை பற்றி தவறாக பேசியதாக, இந்து மக்கள் கட்சி மாநில தலைவர் அர்ஜுன் சம்பத், தனது ட்விட்டர் பக்கத்தில், ‘‘தேவர் ஐயாவை இழிவு படுத்தியதற்காக நடிகர் விஜய் சேதுபதியை உதைப்பவருக்கு ரொக்கப் பரிசு ரூ.1001 வழங்கப்படும்’’ என்று பதிவிட்டிருந்தார். இப்பதிவு தொடர்பாக கோவை கடைவீதி காவல் நிலையத்தில் கடந்த 2021ம் ஆண்டு நவம்பர் 17ம் தேதி புகார் பதியப்பட்டு விசாரணை நடைபெற்று வந்தது. இது தொடர்பான வழக்கு கோவை நீதிமன்றத்தில் உள்ள குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இவ்வழக்கை நீதிபதி சந்தோஷ் விசாரித்தார். அப்போது அர்ஜுன் சம்பத் தனது குற்றத்தை ஒப்புக்கொண்டார். இதனையடுத்து நீதிபதி சந்தோஷ், அர்ஜுன் சம்பத்திற்கு ரூ.4000 அபராதமாக விதித்து தீர்ப்பு வழங்கினார். இதனையடுத்து அர்ஜுன் சம்பத் அபராதத் தொகையை நீதிமன்றத்தில் செலுத்தினார்.