நடிகர் வடிவேலுவின் சகோதரர் மரணம்: முதல்வர் தொலைபேசியில் ஆறுதல்

மதுரை: பிரபல சினிமா நடிகரான வடிவேலுவின் தம்பி, கல்லீரல் பாதிப்பால் உடல்நலமின்றி நேற்று காலை இறந்தார். மதுரை, விரகனூர் அருகே ஐராவதநல்லூர் பகுதியை சேர்ந்தவர் ஜெகதீஸ்வரன் (52). பிரபல நகைச்சுவை நடிகர் வடிவேலுவின் 2வது தம்பி. வடிவேலுக்கு 3 தம்பிகள், இரு தங்கைகள். சிம்பு கதாநாயகனாக நடித்த காதல் அழிவதில்லை உள்ளிட்ட 2 படங்களில் ஜெகதீஸ்வரன் நடித்துள்ளார். பிறகு எந்த படத்திலும் நடிக்கவில்லை. ஜவுளி வியாபாரம் செய்து வந்தார். சில நாட்களாக கல்லீரல் பாதித்து சிகிச்சையில் இருந்த இவர், நேற்று காலை வீட்டில் இருந்தபோது இறந்தார். முன்னதாக தம்பிக்கு உடல்நலம் பாதித்திருப்பதை அறிந்து, நடிகர் வடிவேலு நேற்று அதிகாலையே மதுரை வந்தடைந்தார். ஜெகதீஸ்வரன் உடலுக்கு வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் பி.மூர்த்தி உள்ளிட்ட ஏராளமானோர் மாலை வைத்து அஞ்சலி செலுத்தினர். நேற்று மாலை ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்ட ஜெகதீஸ்வரன் உடல், மதுரை மூலக்கரை மின்மயானத்தில் தகனம் செய்யப்பட்டது.

முதல்வர் இரங்கல்: நடிகர் வடிவேலு தம்பி மறைவுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், திரைக்கலைஞர் வடிவேலு தம்பியான ஜெகதீஸ்வரன் உடல்நலக் குறைவின் காரணமாக உயிரிழந்ததை அறிந்து வருந்துகிறேன். உடன்பிறந்த உற்ற துணையான தன் தம்பியை இழந்து வாடும் வடிவேலுவுக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன் என கூறியுள்ளார். இந்நிலையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் நடிகர் வடிவேலுக்கு தொலை பேசி மூலம் ஆறுதல் கூறி, இரங்கல் தெரிவித்தார்.

Related posts

ஆந்திராவில் அனைத்து கோயில்களின் பிரசாதங்களையும் ஆய்வுசெய்ய ஒன்றிய அரசு முடிவு

உளுந்தூர்பேட்டை அருகே கட்டுப்பாட்டை இழந்த வேன் சாலையோர மரத்தில் மோதியதில் 6 பேர் உயிரிழப்பு: திருச்செந்தூர் சென்று திரும்பிய நிலையில் சோகம்

இலங்கை நாடாளுமன்றத்தைக் கலைத்து, புதிய அதிபர் அநுர குமார திசாநாயக்க உத்தரவு!