நடிகர் ஸ்ரீநாத் பாசி, நடிகை பிரயாகா மார்ட்டினை தாதாவின் போதை பார்ட்டிக்கு அழைத்து சென்றவர் கைது

திருவனந்தபுரம்: பிரபல தாதா ஓம் பிரகாஷ் நடத்திய போதை பார்ட்டிக்கு நடிகர் ஸ்ரீநாத் பாசி, நடிகை பிரயாகா மார்ட்டின் ஆகியோரை கொச்சியில் உள்ள ஓட்டலுக்கு அழைத்துச் சென்றவரை போலீசார் கைது செய்தனர். திருவனந்தபுரத்தை சேர்ந்தவர் ஓம் பிரகாஷ். பிரபல தாதா ஆவார். கடந்த சில தினங்களுக்கு முன்பு கொச்சியில் உள்ள 5 நட்சத்திர ஓட்டலில் அடியாட்களுடன் அறை எடுத்து தங்கி இருந்தார். இவர்கள் ஓட்டலில் 3 அறைகளை எடுத்திருந்தனர். இதற்கான வாடகை மட்டுமே ₹1.5 லட்சம் என்று கூறப்படுகிறது.

இந்த அறைகளில் வைத்து போதை பார்ட்டி நடந்ததாக கூறப்படுகிறது. அதில் எம்டிஎம்ஏ, கொகைன் உள்பட போதைப் பொருட்கள் பரிமாறப்பட்டதாக கொச்சி போலீசுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து போலீசார் ஓட்டலில் அதிரடி சோதனை நடத்தினர். இதில் போதை பார்ட்டி நடந்தது உறுதி செய்யப்பட்டது. அறையிலிருந்து விலை உயர்ந்த ஏராளமான வெளிநாட்டு மது பாட்டில்களும் கைப்பற்றப்பட்டன. இதையடுத்து தாதா ஓம்பிரகாஷ், அவரது கூட்டாளியான கொல்லத்தை சேர்ந்த ஷிஹாஸ் ஆகியோரை போலீசார் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.

இவர்களிடம் நடத்திய விசாரணையில் போதை பார்ட்டியில் பிரபல மலையாள நடிகர் ஸ்ரீநாத் பாசி, நடிகை பிரயாகா மார்ட்டின் உள்பட சில முக்கிய பிரபலங்கள் கலந்து கொண்டது தெரியவந்தது. இது தொடர்பாக எர்ணாகுளம் நீதிமன்றத்தில் போலீசார் அளித்த ரிமாண்ட் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. போதை பார்ட்டியில் கலந்து கொண்டது குறித்து நடிகர் ஸ்ரீநாத் பாசி மற்றும் நடிகை பிரயாகா மார்ட்டினிடம் விரைவில் விசாரணை நடத்த போலீசார் தீர்மானித்துள்ளனர். இதற்கிடையே இவர்களை ஓட்டலுக்கு அழைத்துச் சென்றது கொச்சியை சேர்ந்த பினு ஜோசப் என்பவர் என தெரியவந்தது. இவருக்கு கொச்சியிலுள்ள போதைப் பொருள் கடத்தல் கும்பலுடன் நெருங்கிய தொடர்பு உண்டு. இதையடுத்து போலீசார் அவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related posts

அமைச்சர் ஆர்.எஸ்.ராஜகண்ணப்பன் தலைமையில் நடைபெற்ற கதர் கிராமத் தொழில் வாரியத்தின் முன்னேற்றத்திற்கான ஆய்வுக் கூட்டம்

ஈரோட்டில் கோயில் வளாகத்தில் 10 பைக்குகள் தீயில் எரிந்து நாசம்: போலீசார் விசாரணை

ரயிலில் கடத்திய ரூ.28 லட்சம் ஹவாலா பணம் சிக்கியது: ஆந்திராவை சேர்ந்தவர் கைது