நடிகர் சங்க கட்டிடத்துக்கு விஜயகாந்த் பெயர்: திரையுலகினர் கோரிக்கை

சென்னை: விஜயகாந்த் உடலுக்கு அஞ்சலி செலுத்துவிட்டு திரையுலகினர் நேற்று பேட்டி அளித்தனர்.
அதன் விவரம்: நடிகர் பார்த்திபன்: கேப்டன் விஜயகாந்த் போன்ற ரியல் ஹீரோக்களுக்கு என்றுமே மரணம் கிடையாது , அவரை நம் மனதிற்குள் அடக்கம் செய்யபோகிறோம், பெரியஹீரோவாக ஆகும் முன்பே நிறைய உதவியவர். நான் ஒரு நடிகனுக்கு ரசிகனாக இருந்ததில்லை ஆனால் ஒரு நல்ல மனிதனுக்கு ரசிகனாக இருந்தேன். ஒரு மனிதனுக்கு கிடைத்த மிகப்பெரிய வெற்றி தான் இந்த கூட்டம் . ஒரு மனைவி தாயாக மாறியதால் தான் இந்த சோக செய்தி தாமதமாக வந்தது.

நடிகர் ராம்கி: இந்த சகாப்தத்தில் அவருடன் வேலை செய்தது அவர் கூடவே எனது சினிமா பயணம் நகர்ந்து வந்திருக்கிறது. நடிகர் சங்கத்தை ஒருங்கிணைத்து சங்கத்தின் கடனை அடைத்து, நடிகர் சங்கத்தை வலுப்படுத்தி உள்ளார். படப்பிடிப்பு தளத்தில் கை மூட்டு இறங்கியது. உடனே அவரே தனது கையை சரி செய்து விட்டார். எல்லோரிடமும் நல்லமுறையில் பழகக் கூடிய மனிதாபிமானம் உள்ளவராக விஜயகாந்த் திகழ்ந்துள்ளார். நடிகர் சங்கத்தின் புதிய கட்டிடத்துக்கு அவரு பெயரை சூட்ட வேண்டும்.

இசையமைப்பாளர் தேவா: ஒரு அற்புதமான மனிதர் விஜயகாந்த். நான் கண்ணால் பார்த்த வள்ளல் அவர்.

நடிகர் லிவிங்ஸ்டன்: ரோட்டில் சாதாரணமாக சுற்றித்திரிந்த என்னை ஒரு நடிகராக மாற்றி, ஆயிரம் ரூபாய் சம்பாதித்த என்னை லட்ச கணக்கில் சம்பாதிக்க வைத்த நபர் விஜயகாந்த். ஒரு மனிதர் எப்படி வாழ வேண்டும் என்பதற்கு நல்ல உதாரணம் விஜயகாந்த் அவர்கள் எப்படி எல்லாம் வாழக்கூடாது என்பதற்கு உதாரணமும் விஜயகாந்த் அவர்கள் தான். தன்னை பெரிய ஆள் என்று எந்த சூழலில் வெளிப்படுத்திக் கொள்ள நினைக்க மாட்டார். அவர் மக்கள் மீது செலுத்திய அன்பு தான் இன்று மிகப்பெரிய சொத்து.

நடிகர் ராமராஜன்: நடிகர் சங்கம் தலைவராகவும்,எதிர் கட்சி தலைவராகவும் பன்முக தலைவராக திகழ்ந்தவர். ஏழை எளிய மக்களுக்கு வாரிக் கொடுக்கும் வள்ளலாகவும் திகழ்ந்தவர். இனிய இவரைப் போன்ற ஒரு நல்ல மாமனிதர் கிடைப்பாரா என்று தெரியவில்லை. அவரை இழந்து வாடும் குடும்பத்தாருக்கும் கட்சி தொண்டர்களுக்கும் ஆறுதலை தெரிவித்துக்கொள்கிறேன்.

* விஜய்யின் அழுகை
முன்னதாக நேற்று முன்தினம் நள்ளிரவு நடிகர் விஜய், கோயம்பேட்டிலுள்ள தேமுதிக அலுவலகத்துக்கு வந்து விஜயகாந்த் உடலுக்கு அஞ்சலி செலுத்தினார். அப்போது துக்கத்தை அடக்க முடியாமல் அவர் அழுதார். பொது இடத்தில் இதுவரை விஜய் அழுதது கிடையாது. முதல்முறையாக அவர் அழுததை பார்த்த ரசிகர்கள், நெட்டிசன்கள் விஜயகாந்த் மீது அவருக்கு இருந்த அன்பை குறிப்பிட்டு நெகிழ்ந்தனர்.

Related posts

நீட் தேர்வு விலக்கு மசோதாவுக்கு ஒன்றிய அரசு உடனே ஒப்புதல் தர வேண்டும்: சட்டப்பேரவையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தனி தீர்மானம் கொண்டுவந்தார்; ஒருமனதாக நிறைவேறியது

நீட் தேர்வு முறைகேடு குறித்து விவாதிக்க அனுமதி மறுப்பு எதிர்க்கட்சிகள் அமளியால் நாடாளுமன்றம் முடங்கியது: ராகுல், கார்கே பேசும் போது மைக் அணைக்கப்பட்டதால் அதிர்ச்சி

தலைநகரில் கொட்டித் தீர்த்த கனமழை டெல்லி விமான நிலைய மேற்கூரை சரிந்தது: பயணிகளுடன் நின்றிருந்த கார்கள் நொறுங்கின; உடல் நசுங்கி ஒருவர் பலி 7 பேர் படுகாயம்