திருவனந்தபுரம்: திருவனந்தபுரத்தை சேர்ந்த ஒரு நடிகையை ஓட்டல் அறையில் பூட்டிப் போட்டு பலாத்காரம் செய்ததாக பிரபல மலையாள முன்னணி நடிகர் சித்திக் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கில் சித்திக் தாக்கல் செய்த முன்ஜாமீன் மனுவை கடந்த 3 நாட்களுக்கு முன்பு கேரள உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. இதையடுத்து அவரை கைது செய்ய போலீசார் நடவடிக்கை எடுத்தனர். ஆனால் நீதிமன்ற தீர்ப்பு வந்த உடனேயே சித்திக் தலைமறைவானார். சென்னை, பெங்களூரு உள்பட பல்வேறு பகுதிகளில் போலீசார் அவரை தேடி வருகின்றனர்.
இந்தநிலையில் சித்திக்கை கண்டுபிடிப்பதற்காக திருவனந்தபுரம் குற்றப்பிரிவு போலீஸ் சார்பில் மலையாளம் மற்றும் ஆங்கிலப் நாளிதழ்களில் அவரது படத்துடன் விளம்பரம் செய்யப்பட்டுள்ளது. அதில் படத்தில் காணப்படும் நடிகர் சித்திக் பலாத்கார வழக்கில் தேடப்பட்டு வருவதாகவும், விவரம் தெரிந்தவர்கள் உடனடியாக போலீசுக்கு தகவல் தெரிவிக்க வேண்டும் என்று குறிப்பிடப்பட்டு உள்ளது. இது கேரள சினிமா வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.