திருவனந்தபுரம்: நடிகர் நிவின்பாலி மீது புகாரை தூக்க கலக்கத்தில் கொடுத்ததால் நான் தேதியை மாற்றி சொல்லி இருக்கலாம் என்று இளம்பெண் தெரிவித்தது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. பிரபல மலையாள முன்னணி நடிகர் நிவின் பாலி, சினிமா தயாரிப்பாளர் சுனில் உள்பட 5 பேர் கடந்த வருடம் டிசம்பர் 14 முதல் 16ம் தேதி வரை துபாயிலுள்ள ஒரு ஓட்டல் அறையில் பூட்டிப் போட்டு போதைப்பொருள் கலந்த தண்ணீர் கொடுத்து தன்னை பலாத்காரம் செய்ததாக எர்ணாகுளம் நேரியமங்கலத்தைச் சேர்ந்த ஒரு இளம்பெண் புகார் கூறியது சமீபத்தில் கேரளாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இது தொடர்பாக நிவின் பாலி உள்பட 5 பேர் மீதும் எர்ணாகுளம் ஊன்னுகல் போலீஸ் கூட்டு பலாத்கார வழக்கு பதிவு செய்தது. இந்த வழக்கு பதிவு செய்யப்பட்ட சிறிது நேரத்திலேயே நிருபர்களை சந்தித்த நடிகர் நிவின் பாலி, புகார் கொடுத்த இளம்பெண் யார் என்றே தனக்குத் தெரியாது என்றும், அது ஒரு பொய்யான வழக்கு என்றும் கூறினார்.
இதை சட்டரீதியாக சந்திப்பேன் என்று கூறிய அவர், இது தொடர்பாக விசாரிக்கக் கோரி கேரள முதல்வர் பினராயி விஜயன், கலாச்சாரத்துறை அமைச்சர் சஜி செரியான், டிஜிபி ஷேக் தர்வேஷ் சாகிப் மற்றும் போலீஸ் சிறப்பு விசாரணைக் குழுவிடம் புகார் அளித்தார். இந்நிலையில் துபாயில் வைத்து தன்னை பலாத்காரம் செய்ததாக இளம்பெண் கூறிய கடந்த வருடம் டிசம்பர் 14 முதல் 16ம் தேதி வரை நடிகர் நிவின் பாலி தங்களுடன் படப்பிடிப்பில் இருந்ததாக டைரக்டர்கள் வினீத் ஸ்ரீனிவாசன் மற்றும் அருண் ஆகியோர் கூறியது இந்தப் புகாரில் ஒரு திருப்புமுனையை ஏற்படுத்தியது.இதைத் தொடர்ந்து நடிகர் நிவின் பாலி மீது அந்த இளம்பெண் பொய்யான புகார் கூறியதாக தகவல்கள் பரவின. பொய் புகார் கொடுத்த அந்தப் பெண் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பல்வேறு தரப்பிலிருந்தும் கோரிக்கை எழுந்தது.
இந்நிலையில் நிவின் பாலி உள்பட 5 பேருக்கு எதிராக புகார் கொடுத்த இளம்பெண் கூறியது: நிவின் பாலிக்கு எதிரான புகாரிலிருந்து நான் பின் வாங்கமாட்டேன். என்னை அவர் பலாத்காரம் செய்த தேதியை தூக்கக் கலக்கத்தில் நான் மாற்றி சொல்லி இருக்கலாம். உண்மையை போலீசே கண்டுபிடிக்கட்டும். இவ்வாறு அவர் கூறினார். ஊன்னுகல் போலீசில் அளித்த புகாரில் 2023ம் வருடம் டிசம்பர் 14 முதல் 16ம் தேதி வரை துபாயிலுள்ள ஓட்டல் அறையில் வைத்து நடிகர் நிவின் பாலி உள்பட 5 பேர் தன்னை பலாத்காரம் செய்ததாக அந்த இளம்பெண் குறிப்பிட்டுள்ளார். மேலும் டிவி சேனல்கள் மற்றும் பத்திரிகைகளுக்கு அளித்த பேட்டியிலும் இதே தேதியைத் தான் அவர் கூறினார் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.