சென்னை: அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை: பாபநாசத்தில் இருந்து திருநெல்வேலிக்கு நேற்று முன்தினம் அரசு பேருந்து சென்று கொண்டிருந்தபோது, அம்பாசமுத்திரத்தை அடுத்த கல்லிடைக்குறிச்சியில், இருசக்கர வாகனத்தில் வந்த மூன்று பேர் பேருந்தை வழிமறித்து ஏறியுள்ளனர். இதை தொடர்ந்து, டிரைவர் ரெஜின் மற்றும் நடத்துநர் பாண்டி ஆகியோரை அந்த கும்பல் அரிவாளால் வெட்டியதில் இருவரும் படுகாயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். அரசு பேருந்து ஊழியர்கள் மீது நடத்தப்பட்டுள்ள கொடுஞ்செயலை வன்மையாக கண்டிக்கிறேன். இதுபோன்ற சம்பவங்கள் இனியும் தொடராமல் இருக்க, தமிழக காவல்துறை பொது அமைதிக்கு பங்கம் விளைவிப்போரை இரும்புக்கரம் கொண்டு அடக்க வேண்டும்.