*இடம் தேர்வு செய்யும் பணியில் வருவாய்த்துறையினர்
அணைக்கட்டு : கெங்கநல்லூர், கருங்காலி ஆகிய கிராமங்களில் நவீன மின்மயானம் அமைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு, இடத்தை தேர்வு செய்யும் பணியில் வருவாய்த்துறையினர் ஈடுபட்டுள்ளனர். வேலூர் மாவட்டம் அணைக்கட்டு தாலுகாவுக்கு உட்பட்ட கெங்கநல்லூர், கருங்காலி பகுதியில் புதியதாக நவீன மின் மயானம் அமைக்கப்பட உள்ளது. இதற்காக இடம் தேர்வு செய்யும் பணியில் ஈடுபட வேண்டும் என வருவாய்த்துறையினருக்கு கலெக்டர் உத்தரவிட்டிருந்தார்.
அதன்படி மின்மயானம் அமைப்பதற்கு தேவைப்படும் அரசுக்கு சொந்தமான இடங்களை நேற்று முன்தினம் தாசில்தார் வேண்டா, வருவாய் ஆய்வாளர் ரேவதி, சர்வேயர்களுடன் ஆய்வு செய்தார். அப்போது அந்த இடத்தின் வகைப்பாடு, மொத்தமாக அங்கு மயானம் அமைப்பதற்கு தேவைப்படும் இடம் உள்ளதா என எனவும் இந்த பகுதியில் மின் மயானம் அமைக்கப்பட்டால் அருகில் உள்ள மக்களுக்கு ஏதாவது பிரச்னை ஏற்படுமா எனவும் ஆய்வு செய்து அங்கிருந்து மக்களிடம் விசாரணை நடத்தினார்.
தொடர்ந்து கெங்கநல்லூர், கருங்காலி ஆகிய 2 இடங்களிலும் ஆய்வு செய்தது குறித்த அறிக்கையை விஏஓக்கள், வருவாய் ஆய்வாளர்கள் சமர்ப்பிக்க வேண்டும் என தாசில்தார் உத்தரவிட்டார்.
இதுகுறித்து அதிகாரிகள் கூறுகையில், ‘கெங்கநல்லூர், கருங்காலி பகுதியில் நவீன மின் மயானம் அமைக்கப்பட உள்ளது. இதற்கான இடம் தேர்வு செய்யும் பணி நடைபெற்று வருகிறது.
2இடம் இறுதி செய்யப்பட்டதும், அந்த இடத்தில் மின் மயானம் அமைப்பதற்கான பணிகள் தொடங்கும். மொத்தமாக ஒரு ஏக்கருக்கு மேல் இடம் தேவை என்பதால் அந்தப் பகுதியில் அரசுக்கு சொந்தமான இடம் உள்ளதா என ஆய்வு செய்து விசாரணை நடத்தப்பட்டுள்ளது’ என்றனர்.