சாலையில் நடந்து சென்ற இளம்பெண் ஆசிட் வீசி படுகொலை: ஆந்திராவில் பயங்கரம்

திருப்பதி: ஆந்திர மாநிலம் விஜயவாடா அருகே உள்ள எலூரை சேர்ந்தவர் எட்லா பிரான்சிகா (வயது 35). இவர் அங்குள்ள தனியார் பல் மருத்துவ கல்லூரியில் வரவேற்பாளராக பணியாற்றி வந்தார். இவருடைய கணவர் ராஜமுந்திரியில் என்ஜினீயராக பணியாற்றி வருகிறார். காதலித்து இருவரும் திருமணம் செய்து கொண்டனர். கருத்து வேறுபாடு காரணமாக பிரான்சிகா கணவரை பிரிந்து பெற்றோருடன் வாழ்ந்து வந்தார். இந்த நிலையில் சம்பவத்தன்று பிரான்சிகா வேலை முடிந்து வீட்டிற்கு வந்து கொண்டிருந்தார். அவரது வீட்டின் அருகே வந்தபோது பைக்கில் வந்த 4 பேர் அவர் மீது ஆசிட் வீசினர்.

இதில் அவரது தலை மற்றும் முகம் மார்பு பகுதிகளில் பலத்த காயங்கள் ஏற்பட்டது. இதனால் அவர் அலறி துடித்தபடி சாலையில் விழுந்தார். இதனைக் கண்ட பொதுமக்கள் ஓடிச்சென்று பிரான்சிகாவை மீட்டனர் . சம்பவ இடத்திற்கு வந்த அவரது பெற்றோர் கதறி அழுதனர். உடனடியாக பிரான்சிகாவை தனியார் ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக விஜயவாடா ஆஸ்பத்திரிக்கு மாற்றப்பட்டார் . அங்கு சிகிச்சை பெற்று வந்த பிரான்சிகா நேற்று சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார். ஆசிட் வீச்சு சம்பவத்தில் குற்றவாளிகளை பிடிக்க 6 தனிப்படைகள் அமைக்கப்பட்டன.

மேலும் அந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராக்களையும் போலீசார் ஆய்வு செய்தனர். பிரான்சிகா மீது அடையாளம் தெரியாத 4 பெண்கள் ஆசிட் வீசி விட்டு சென்றதாக பொதுமக்கள் தெரிவித்தனர். ஆனாலும் போலீசாருக்கு மேலும் சிலர் மீது சந்தேகம் ஏற்பட்டது. இது தொடர்பாக 2 பேரை பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் ஆந்திராவில் பரபரப்பை ஏற்படுத்தியது.

Related posts

திரைப்பட நடன இயக்குநர் ஜானி மாஸ்டருக்கு அறிவிக்கப்பட்ட தேசிய விருது ரத்து

சேலம், சிவகங்கை மாவட்டங்களில் இரவில் இடியுடன் கனமழை

இந்திய விமானப்படையின் 92வது ஆண்டையொட்டி சென்னை மெரினாவில் இன்று சாகச நிகழ்ச்சி