தர்மபுரி: கடந்த அதிமுக ஆட்சியில் உயர் கல்வித்துறை அமைச்சராக இருந்த கே.பி.அன்பழகனின் வீடு மற்றும் உறவினர்கள், நண்பர்களின் வீடுகள் என 58 இடங்களில் லஞ்ச ஒழிப்பு போலீசார் நடத்திய சோதனையில், கடந்த 2016-2021ம் ஆண்டு வரை வருமானத்திற்கு அதிகமாக ரூ.45 கோடியே 20 லட்சத்து 53 ஆயிரம் சொத்துக்களை வாங்கி குவித்திருப்பதாக கண்டுபிடித்து, அதற்கான ஆவணங்களையும் கைப்பற்றினர். இதுதொடர்பாக, முன்னாள் அமைச்சர் கே.பி.அன்பழகன் எம்எல்ஏ உட்பட 11 பேர் மீது, லஞ்ச ஒழிப்பு போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இந்த வழக்கு தர்மபுரி மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் நேற்று விசாரணைக்கு வந்தது. முன்னாள் அமைச்சர் கே.பி.அன்பழகன் உள்பட 11 பேர், நீதிபதி மணிமொழி முன்னிலையில் கோர்ட்டில் ஆஜராகினர். வழக்கை விசாரித்த நீதிபதி, வரும் 4ம் தேதிக்கு விசாரணையை ஒத்தி வைத்தார். இதையடுத்து, அனைவரும் 10 ஆயிரம் பக்கங்கள் கொண்ட குற்றப்பத்திரிகை நகல்களை பெற்றுக்கொண்டனர்.